பதிவு செய்த நாள்
02
செப்
2016
11:09
கும்மிடிப்பூண்டி: சிறுவாபுரி பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில், நாளை மறுநாள், வள்ளி மணவாள பெருமானுக்கு திருக்கல்யாண மகோற்சவம் நடைபெற உள்ளது. சென்னை-கோல்கட்டா தேசிய நெடுஞ்சாலையில், சென்னையில் இருந்து, 35 கி.மீ., தொலைவில் உள்ள சின்னம்பேடு கிராமத்தில் அமைந்துள்ளது. சிறுவாபுரி பாலசுப்பிரமணிய சுவாமி கோவில்.
இங்கு மணக்கோலத்தில் காட்சியளிக்கும் வள்ளி மணவாள பெருமானை வணங்கினால் திருமணம் கைகூடும் என்பது ஐதீகம், திருமண பிரார்த்தனைக்கான, முக்கிய வழிபாடாக, வள்ளி மணவாள பெருமானுக்கு திருக்கல்யாண மகோற்சவம் நடைபெறும். பின், திருமணமாகாத ஆண், பெண்கள், மாலை கொண்டு வந்து சுவாமிக்கு அணிவித்து, அதை பிரசாதமாக பெற்று, அணிந்தபடி, சுவாமி கோவிலை சுற்றி, வலம் வரும்போது பின்னால் வரவேண்டும், இந்த பிரார்த்தனையில் பங்கேற்பவர்களுக்கு அடுத்த திருமண மகோற்சவத்திற்குள் திருமண கைகூடுவதாக ஐதீகம். சென்னையை சேர்ந்த அண்ணாமலையார் ஆன்மிக வழிபாட்டு குழுவினர் சார்பில், நாளை மறுநாள், ஏழாம் ஆண்டு திருக்கல்யாண மகோற்சவம், காலை, 9:00 மணிக்கு நடைபெற உள்ளது.
பிரார்த்தனையாளர்களுக்கு, குழுவினர் சார்பில் மாலை இலவசமாக அளிக்கப்படுகிறது. திருக்கல்யாணத்தை முன்னிட்டு, காலை சிற்றுண்டியும், மதியம் கல்யாணவிருந்துக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நந்திக்கொடியோன் கயிலாய சிவவாத்திய குழுவினரின் திருக்கயிலாய இசை நிகழ்ச்சியும் நடக்கிறது. கோவிலின் நிர்வாக அலுவலர் நாராயணன், தலைமை குருக்கள் ஆனந்தன் ஆகியோர் மேற்பார்வையில், திருக்கல்யாண ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. விழாவைச் சிறப்பிக்க சேவா தொண்டர்கள் வரவேற்கப்படுகின்றனர். இது தொடர்பான விபரங்கள் (www.annaamalayar.com)இணையதளத்திலும் அளிக்கப்பட்டுள்ளன. தொடர்புக்கு: 9944309719.