பதிவு செய்த நாள்
07
செப்
2016
05:09
விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட உள்ள இந்த நிலையில் விநாயகருக்கு பிடித்தமான அருகம்புல் பற்றியும் அதன் மருத்துவ குணங்களைப் பற்றியும் அறிந்து கொள்வோம். அருகம்புல் எவ்வளவு காலம் மழை இல்லாவிட்டாலும் காய்ந்து போய் காணப்படுமே தவிர அழிந்து போகாது. சிறிது மழை பெய்தால்கூட உடனே துளிர்விடும். அதுபோல் எவ்வளவு துன்பங்கள் வந்தாலும் சோர்ந்து போகாமல் நம்பிக்கையோடு இருக்க வேண்டும் என்று நம் முன்னோர்கள் அருகம்புல்லை உதாரணமாகச் சொல்லி வாழ்த்துவதைப் பார்க்கும்போதே அதன் மகத்துவம் நமக்குத் தெரியவரும். அருகம்புல் முழுத்தாவரமும் இனிப்புசுவையும்,குளிர்ச்சித் தன்மையும் உடையது.
உடல் வெப்பத்தை அகற்றும்,சிறுநீர் பெருக்கும்,குடல் புண்களை ஆற்றும், இரத்தை தூய்மையாக்கும்,உடலை பலப்படுத்தும், கண் பார்வை தெளிவுபெறும். அருகம்புல் பச்சையத்தில் அதிக அளவு கரோட்டினாய்டுகள் என்ற வேதி பொருள் உள்ளன.
அருகம்புல் வாதபித்த ஐயமோடீளை
சிறுக அறுக்கும் இன்னுஞ்செப்ப அறிவுதறும்
கண்ணோ யோடு தலைநோய் கண்புகையிரத்தபித்தம்
உண்ணோ யொழிக்கு முரை இது அகத்தியர் பாடல்.
ருகம்புல்லை பிள்ளையார் புல் என்று அழைப்பார்கள். வீடுகளில் அருகை சாணம் அல்லது மஞ்சளில் நட்டு வைத்து வணங்குவார்கள். ஆன்மீகத்துடன் மருத்துவத்தைக் கலந்தே நம் முன்னோர்கள் சொல்லிவந்தனர். எமனுடைய பிள்ளை அனலன். எப்போதும் கொதித்துக் கொண்டே இருக்கும் அசுரனான அவன், வரம் ஒன்று பெற்றிருந்தான். யாருடைய உடம்பிலும் அவர்களுக்குத் தெரியாமல் புகுந்து சக்தியை உறிஞ்சி விடுவது என்பதே அந்த வரம்.
அவனது தொல்லை தாங்காத தேவர்கள் விநாயகரிடம் சென்று, அனலனிடம் இருந்து தங்களை காப்பாற்றும்படி முறையிட்டனர். விநாயகர் அவனை அப்படியே விழுங்கி விட்டார். அதனால், விநாயகரின் மேனி கொதித்தது. அகில உலகமுமே சூடாகத் தொடங்கியது. செய்வதறியாத தேவர்கள் பால், தயிர், அமிர்தம் என அவரின் திருமேனியில் சாத்தி குளிர்விக்க முயன்றனர். சந்திரன் தன் குளிர்ந்த கிரணங்களை விநாயகர் மீது செலுத்தினார். ஆனாலும், சூடு கொஞ்சம் கூடத் தணியவே இல்லை. அப்போது அத்ரி, பிருகு, குத்ஸர், வசிஷ்டர், கவுதமர், காஸ்யபர், ஆங்கிரஸர் என்னும் சப்த ரிஷிகளும் அங்கு வந்து, ஒரு சாண் அளவுள்ள 21 அருகம்புற்களை விநாயகர் மீது சாத்தினர். சூடு தணிந்து திருமேனி குளிர்ந்தது. உலகமும் அமைதி அடைந்தது. தேவர்களும், சப்தரிஷிகளும் விநாயகரிடம், ஆனைமுகக் கடவுளே! இதே போல அருகம்புல் சாத்தி உங்களை வழிபடுவோருக்கு எல்லா விதமான மங்களங்களையும் அருள வேண்டும்,” என வேண்டினர்.’ அப்படியே ஆகட்டும்” என்று விநாயகரும் அருள் புரிந்தார்.