பதிவு செய்த நாள்
12
செப்
2016
12:09
சிந்து, கங்கை நதிக்கரை நாகரிகத்திற்குப் பின், இரண்டாம் நிலை நகர நாகரிகங்கள், தமிழகத்தில் தோன்றவில்லை என்ற கருத்துக்கு மாறாய், வைகை கரை நாகரிகம் சிறந்து விளங்கியதற்கான சான்றுகள், இந்திய தொல்லியல் துறையினர் நடத்திய, கீழடி அகழாய்வில் கிடைத்துள்ளன. தொல்லியல் மேடுகள்: மதுரையில் இருந்து, கிழக்கே, 15 கி.மீ., தொலைவில், சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கீழடியில், 110 ஏக்கர் பரப்பளவில் இரண்டு தொல்லியல் மேடுகள் கண்டு பிடிக்கப்பட்டன. 2015 முதல், தற்போது வரை, 102 குழிகள் அமைத்து ஆய்வு செய்ததில், உறைகிணறுகள், சுட்ட செங்கல் சுவர், சுடுமண் கூரை ஓடுகள், தொழிற்சாலைக்குப் பயன்படும் இரண்டடுக்கு வெப்ப உலைகள் உள்ளிட்டவற்றுடன், 3,000க்கும் அதிகமான தொல்பொருட்களும் கிடைத்தன. அவற்றில், சுட்ட செங்கற்களால் ஆன, திறந்த மற்றும் மூடிய கால்வாய், சுடுமண் உறை கால்வாய், செங்கல் தொட்டி ஆகியவற்றை, ஆய்வாளர்கள் மிக முக்கிய சான்றுகளாகக் கருதுகின்றனர்.
இதுகுறித்து, இந்திய தொல்லியல் துறையின் தென் மண்டல கண்காணிப்பாளரும், கீழடி தொல்லியல் ஆய்வாளருமான, கி.அமர்நாத் ராமகிருஷ்ணன் கூறியதாவது: ழடி தொல்லியல் மேடு அமைந்துள்ள, 4.5 கி.மீ., துாரத்தையும், அறிவியல் முறையில் கட்டம் அமைத்து, ஆய்வு மேற்கொண்டு, ஆய்வு முடிவுகளை ஒப்பீடு செய்யும் வகையில், ஆவணப்படுத்தி வருகிறோம். இது, தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்ட மிகப்பெரிய அகழாய்வு. இரண்டு கட்டமாக நடத்தப்பட்ட அகழாய்வில், முழுமையான சான்றுகள் கிடைக்கவில்லை; முழுமையான ஆய்வுக்கு பிறகே, கட்டடங்கள் பற்றிய தகவல்களை அறிய முடியும். இந்த மேட்டில், 4.5 மீ., ஆழத்திற்குள், மூன்று வித மண் அடுக்குகள் கிடைக்கின்றன. அதில், முதல், 3 மீ., ஆழத்தில் மேம்பட்ட நாகரிக காலப்பொருட்களும்; 3 மீ., முதல், 4.5 மீ., ஆழத்தில் இரும்பு காலப் பொருட்களும்; 4.5 மீ., முதல், 6 மீ., ஆழத்தில் கன்னி மண்ணும்; 6 மீ., ஆழத்திற்குப் பின், 12 மீ., வரை, ஆற்று மணலும் இருக்கின்றன. அதனால், அந்த பகுதியில், வைகை ஆறு பாய்ந்திருக்கலாம் என, கணிக்க முடிகிறது.
மரத்துாண்கள்: இங்குள்ள கட்டடங்களில், 36 : 22 : 6, 34 : 21 : 5, 35 : 22 : 6, 32 : 21 : 5 செ.மீ., அளவுள்ள செங்கற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இரண்டு துளையிடப்பட்ட சுடுமண் ஓடுகள், ஆணிகள் மூலம் வேயப்பட்டுள்ளன. கூரைகளை தாங்க, மரத்துாண்களை அக்கால மக்கள் அமைத்துள்ளனர். அவற்றுக்கான குச்சிநடு குழிகள், பல்வேறு ஆழத்தில் அமைந்துள்ளன. கிடைத்துள்ள மண்பாண்டங்கள், அணிகலன்கள் உள்ளிட்ட பொருட்களை, சி 14 ஆய்வுக்கு உட்படுத்தி, காலக்கணிப்பு செய்ய வேண்டி உள்ளது. இந்த ஆய்வு, வரலாற்றில் திருப்புமுனையாக அமைய வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
அகழாய்வில் கிடைத்தது என்ன?: ரவுலட்டடு பானை ஓடுகள், தமிழ் பிராமி எழுத்துக்களுடன் கூடிய, கருப்பு, சிவப்பு, செம்பழுப்பு நிற பானை ஓடுகள், கண்ணாடி, கல்மணிகள், சங்கு வளையல்கள், சுடுமண் பொருட்கள், தந்தத்தால் ஆன பொருட்கள், முத்திரை, செம்பு ஆபரணங்கள், இரும்பு ஆயுதங்கள் ஆகியவை கிடைத்துள்ளன. 10 சங்க கால நாணயங்களும், கி.பி., 10ம் நுாற்றாண்டைச் சேர்ந்த, சோழர் கால நாணயங்களும் கிடைத்துள்ளன.
கீழடி மக்கள் கோரிக்கை: கீழடி அகழாய்வின் தொல்பொருட்களைப் பாதுகாக்க, அதே பகுதியில், அருங்காட்சியகம் அமைக்க வேண்டும் என, கிராம மக்கள், தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
கதை சொல்லும் நாணயம்: நாணயங்களின் புகைப்படத்தைப் பார்த்த பின், தென்னிந்திய நாணயவியல் சங்கத் தலைவர் கூறிய கருத்து: இவை, சங்ககால எழுத்துள்ள நாணயங்கள். இவற்றை சுத்தப்படுத்தினால், எழுத்துக்களை படிக்க முடியும். மன்னரின் பெயர் இருந்தால், அது, மிகச் சிறப்பான வரலாற்றுச் சான்றாக அமையும். கீழ் புறம் வெட்டப்பட்ட செவ்வக நாணயம் இது, தொன்மையான செம்பு முத்திரை நாணயம். நாணயத்தின் ஒரு மூலையில், இதுபோல் வெட்டப்பட்டிருந்தால், அது முத்திரை நாணயத்திற்கான அடையாளம். இது, கி.மு., மூன்று அல்லது நான்காம் நுாற்றாண்டைச் சேர்ந்ததாக இருக்கலாம்.