பதிவு செய்த நாள்
07
அக்
2016
11:10
சாயல்குடி,:சாயல்குடி பகுதியில் யாசகம் பெற்று நேர்த்திக்கடன் செலுத்தும் முத்தாரம்மன் பக்தர்கள் வலம் வருகின்றனர். துாத்துக்குடி அருகே குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோயிலில் தசரா விழா பிரசித்தி பெற்றது. தசரா விழா கொடியேற்றம் அக்.,1ல் துவங்கியது. 10 நாட்கள் நடைபெறும் திருவிழாவில் பங்கேற்பதற்காக விரதம் இருந்து பல்வேறு வேடமணிந்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்துவர். சாயல்குடி, கடலாடி, கன்னிராஜபுரம், நரிப்பையூர் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த பக்தர்கள், பத்திரகாளியம்மன், மாடன், கருப்பன், முருகன், விநாயகர், பிச்சைக்காரர், கருங்காலி, காளி, போலீசார், மோகினி, கிளி, ராஜா, யானை, கரடி, மயில், மன்மதன் உள்ளிட்ட விதவிதமான வேடங்களில் கடைகள், வீடுகள் தோறும் யாசகம் பெறும் நேர்த்திக்கடனை செய்து வருகின்றனர். சாயல்குடி மாரியப்பன் கூறுகையில், இப்பகுதியில் முத்தாரம்மன் கோயிலுக்கு செல்லும் பக்தர்கள் அதிகம் உள்ளனர். தசராவின் நிறைவு நாளன்று, ஒரு குழுவாக வேன்களில் பயணம், செய்து, யாசகம் பெற்ற தொகையை காணிக்கையாக செலுத்திவிடுவோம். தர்மம் எடுத்துதான் கோயிலுக்கு செல்ல வேண்டும், என்ற நடைமுறை பல காலமாக நடைமுறையில் இருந்து வருகிறது, என்றார்.