சபரிமலை: சபரிமலை மற்றும் மாளிகைப்புறம் கோயில்களுக்கு கார்த்திகை ஒன்றாம் தேதி முதல் ஒரு ஆண்டு காலத்துக்கான புதிய மேல்சாந்திகள் தேர்வு செய்யப்பட்டனர். ஐப்பசி ஒன்றாம் தேதியான நேற்று காலை சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. சபரிமலையில் எல்லா கார்த்திகை ஒன்றாம் தேதி முதல் ஒரு ஆண்டு காலத்துக்கு புதிய மேல்சாந்தி தேர்வு செய்யப்படுகின்றனர். கேரள ஐகோர்ட் வழிகாட்டுதல் படி தேவசம் நிர்வாகிகள் மற்றும் சபரிமலை தந்திரிகள் அடங்கிய குழுவினர் நேர்முகத்தேர்வு நடத்தி ஒரு பட்டியல் தயாரிக்கின்றனர். பின்னர் ஐப்பசி ஒன்றாம் தேதி சபரிமலையில் இந்த பட்டியலில் இருந்து ஒருவர் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்படுவார். வேத அறிவுடன் ஐயப்பன் அருளும் வேண்டும் என்பது இதன் அடிப்படை. இவர் ஒரு ஆண்டு காலம் சபரிமலையில் தங்கி பூஜைகள் செய்ய வேண்டும். நவ.16-ம் தேதி கார்த்திகை ஒன்றாம் தேதி முதல் பதவியேற்கும் புதிய மேல்சாந்தி குலுக்கல் தேர்வு நேற்று சபரிமலையில் நடைபெற்றது.
திருவிதாங்கூர் தேவசம்போர்டு தலைவர் பிரயார் கோபால கிருஷ்ணன், உறுப்பினர் அஜய்தரயில், ஐகோர்ட் நியமித்துள்ள ஸ்பெஷல் கமிஷனர் எம். மனோஜ், தேவசம் செயலர் ஜெயக்குமார் ஆகியோர் முன்னிலையில் இந்த தேர்வு நடைபெற்றது. தந்திரி கண்டரரு ராஜீவரரு துண்டு சீட்டுகள் அடங்கிய பாத்திரத்துக்கு பூஜைகள் நடத்தி கொடுத்தார். பின்னர் பந்தளம் அரண்மனை குடும்பத்தை சேர்ந்த சிறுவன் நவநீத வர்மா துண்டுகளை எடுத்தார். முதலில் எடுக்கப்பட்ட துண்டு சீட்டில் பாலக்காடு மாவட்டம் ஒற்றப்பாலத்தை சேர்ந்த உண்ணிகிருஷ்ணன் நம்பூதிரி பெயர் வந்தது. அடுத்த பாத்திரத்தில் எடுக்கப்பட்ட துண்டு சீட்டில் மேல்சாந்தி என வந்ததால் அவர் மேல்சாந்தியாக தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டார்.
மாளிகைப்புறம்: சபரிமலை மேல்சாந்தியாக தேர்வு செய்யப்பட்ட உண்ணிகிருஷ்ணன் நம்பூதிரி மாளிகைப்புறம் பட்டியலிலும் இடம் பெற்றிருந்தார். இதனால் அவர் பெயர் நீக்கம் செய்யப்பட்டு மாளிகைப்புறம் கோயிலுக்கு 10 பேர் பட்டியல் குலுக்கப்பட்டது. பந்தளம் அரண்மனையை சேர்ந்த சிறுமி லாவண்ய ராஜா இந்த துண்டு சீட்டுகளை எடுத்தார். முதல் துண்டில் கோட்டயம் மாவட்டம் சங்ஙனாசேரியை சேர்ந்த மனுகுமார் பெயர் வந்தது. அடுத்த பாத்திரத்தில் எடுக்கப்பட்ட துண்டுசீட்டில் மேல்சாந்தி என பெயர் வந்ததால் அவர் மேல்சாந்தியாக தேர்வு செய்யப்பட்டார். நீண்ட இடைவெளிக்கு பின்னர் சபரிமலை மற்றும் மாளிகைப்புறம் கோயில்களுக்கு மேல்சாந்திகள் முதல் சீட்டிலேயே தேர்வு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
பக்தர்கள் கூட்டம்: ஐப்பசி ஒன்றாம் தேதியான நேற்று பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. மண்டல மகரவிளக்கு காலத்தில் காணப்படும் கூட்டம் போல பக்தர்கள் கூட்டம் முண்டியடித்ததால் போலீசார் அதனை கட்டுப்படுத்த மிகவும் சிரமப்பட்டனர். நேற்று மதியத்துக்கு பின்னர் பெய்த மழையால் பக்தர்கள் சிரமப்பட்டனர். வரும் 21-ம் தேதி இரவு 10 மணி வரை நடை திறந்திருக்கும. எல்லா நாட்களிலும் படிபூஜை நடைபெறும். 20-ம் தேதி அஷ்ட பந்தன கலசம் நடைபெறுவதால் 20,21 தேதிகளில் நெய்யபிஷேகம் கிடையாது. முதல்வர் வருகை: சபரிமலையில் மண்டல மகரவிளக்கு கால பணிகளை ஆய்வு செய்யவும், ஒருங்கிணைப்பதற்காகவும் கேரள முதல்வர் பிணறாயி விஜயன் வரும் 29-ம் தேதி சன்னிதானம் வருகிறார்.