பதிவு செய்த நாள்
08
நவ
2016
11:11
குறிச்சி: ஒத்தக்கால்மண்டபம் நவகோடி நாராயண பெருமாள் கோவிலில், நேற்று நடந்த கும்பாபிஷேக விழாவில், திரளான பக்தர்கள் பங்கேற்றனர். கோவை – பொள்ளாச்சி தேசிய நெடுஞ்சாலையில், மலுமிச்சம்பட்டியை அடுத்து தண்ணீர்பந்தல் அருகே, நுாறாண்டுகள் பழமையான, ஸ்ரீதேவி, பூதேவி சமேத நவகோடி நாராயண பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலிலில், நாராயண பெருமாள் சன்னிதி, விமானம், பிரகாரம், மண்டபங்களில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன; புதிய மகாமண்டபமும் கட்டப்பட்டது. பணிகள் நிறைவடைந்து, கும்பாபிஷேக விழா, கடந்த, 4ம் தேதி, பகவத் பிரார்த்தனையுடன் துவங்கியது. நேற்று அதிகாலை, 4:00 மணிக்கு, விஸ்வரூபம், நித்ய திரு ஆராதனை, வேத இதிகாச பாராயணங்களும், கடம் புறப்பாடும் நடந்தன. காலை, 7:00 மணிக்கு மேல், விமானம், கோபுரம், சன்னிதிகளுக்கு திருக்கோசியூர் மாதவன் கும்பாபிஷேகம் நடத்தி வைத்தார். இதில், திரளான பக்தர்கள் பங்கேற்று, பெருமாளை வழிபட்டு சென்றனர்.