விலங்குகள் நடமாட்டம் அதிகரிப்பு: பக்தர்கள் விழிப்புணர்வு அவசியம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
03டிச 2016 11:12
சபரிமலை: "சபரிமலை வனப்பகுதியில் யானை, புலி நடமாட்டம் அதிகளவில் உள்ளதால், இரவு நேரத்தில் வாகனங்களில் செல்லும் பக்தர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என போலீசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
பத்தணந்திட்டை பம்பை ரோடு, எருமேலி பம்பை ரோடுகள் அடர்ந்த காடுகள் வழியாக அமைக்கப்பட்டுள்ளது. இதில் பல பகுதிகளில் காட்டு யானைகள் சர்வ சாதாரணமாக ரோடுகளை கடந்து செல்லும். இரவு நேரத்தில் கூட்டமாக வரும் யானைகள் நீண்ட நேரம் ரோட்டில் நிற்பதும் உண்டு. இந்த நேரத்தில் பெரிய பஸ்கள் வந்தால் பஸ்சை நிறுத்தி விட்டு சிறிய வெளிச்சத்தில் உள்ள விளக்குகளை எரிய விடுவர். சிறிது நேரத்தில் யானை சென்று விடும். யானைகள் தாக்குதல்: ஆனால் ஆட்டோ, பைக் போன்ற வாகனங்களில் வருபவர்களை யானைகள் பதம் பார்த்து விடும். எல்லா சீசனிலும் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறுகிறது. கடந்த சீசனில் பைக்கில் வந்த இருவரில் ஒருவரை யானை மிதித்து கொன்றது. தற்போது டிச2., முன்தினம் இரவில் ஆட்டோவில் வந்த பயணிகளை காட்டு யானை தாக்கியதில் ஒருவர் இறந்தார்.
கவனம் தேவை: பம்பை ரோட்டில் மண்ணாறகுளஞ்ஞிமுதல் சாலயக்கயம் வரையிலும் யானை நடமாட்டம் அதிகமாக உள்ளது. எனவே இரவு நேரத்தில் சிறிய வாகனங்களில் வரும் பக்தர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர். யானைகள் கடக்கும் பகுதி என்ற எச்சரிக்கை பலகை வைக்கப்பட்ட இடத்தில் கவனமாக வாகனங்களை இயக்க வேண்டும். முடிந்த அளவு ஆட்டோ, டூவீலர் போன்ற வாகனங்களில் இரவு நேரத்தில் வருவதை பக்தர்கள் தவிர்க்க வேண்டும் என்று போலீசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
புலிகள் நடமாட்டம்: இதற்கிடையில் சபரிமலை காடுகளில் புலிகளின் நடமாட்டத்தை கண்காணிக்க வனத்துறை சார்பில் வைக்கப்பட்டுள்ள கேமராக்களில் இரண்டு புலிகள் பதிவாகியுள்ளது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. புலி நடமாடிய பகுதி சபரிலை கோயிலில் இருந்து இரண்டு கி.மீ. தொலைவில் உள்ளது. கடந்த மூன்று மாத இடைவெளியில் புல்மேடு பாதையில் சத்திரம் உப்புபாறைக்கு இடையில் இரண்டு காட்டு எருமை மற்றும் இரண்டு யானை குட்டிகளை புலி அடித்துக் கொன்றது. இதை தொடர்ந்துதான் இந்த பகுதியில் கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படுகிறது. இதனால் பக்தர்கள் வனப்பகுதி வழியாக வரும் போது விழிப்புணர்வுடன் இருக்க வேண்டுமென போலீசார் தெரிவித்துள்ளனர்.