பதிவு செய்த நாள்
08
டிச
2016
11:12
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீப திருவிழாவில், ரிஷப வாகனத்தில் சுவாமி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீப திருவிழாவில், நேற்று, ஐந்தாம் நாள் விழாவில், அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டு, அருணாசலேஸ்வரர், உண்ணாமுலையம்மனுக்கு சிறப்பு அபி?ஷகம் மற்றும் சிறப்பு பூஜை நடந்தது. தொடர்ந்து, காலை விநாயகர் மூஷிக வாகனத்திலும், சந்திரசேகரர் கண்ணாடி ரிஷப வாகனத்திலும் வீதி உலா வந்தனர். திருக்கல்யாண மண்டபத்தில், இரவு பஞ்ச மூர்த்திகள் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, சிறப்பு பூஜை செய்யப்பட்டு அலங்கார மண்டபத்தில் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். பின்னர் விநாயகர் வெள்ளி மூஷிக வாகனத்திலும், வள்ளி தெய்வானை சமேத முருகர் வெள்ளி மயில் வாகனத்திலும், அருணாசலேஸ்வரர் சமேத உண்ணாமுலையம்மன் ரிஷப வாகனத்திலும், பராசக்தி அம்மன் சின்ன ரிஷப வாகனத்திலும், சண்டிகேஸ்வரர் இந்திர விமானத்திலும் அலங்கரிக்கப்பட்டு, வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.