பதிவு செய்த நாள்
10
டிச
2016
12:12
திருவண்ணாமலை: திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவில் தீப திருவிழாவை முன்னிட்டு, கோவில் வளாகம் முழுவதும், போலீஸ் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவில் தீப திருவிழாவில் வரும், 12 அன்று மஹா தீபம் ஏற்றப்பட உள்ளது. இதை காண, பல்வேறு பகுதிகளிலிருந்து, 15 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வருவர். அவ்வாறு வரும் பக்தர்கள், 14 கி.மீ தூரம் நடந்து சென்று கிரிவலம் செல்வர். பக்தர்களின் பாதுகாப்பு பணியில், நான்கு ஐ.ஜி.,க்கள், நான்கு டி.ஐ.ஜி.,க்கள், 18 எஸ்.பி.,க்கள்,
20 ஏ.டி.எஸ்.பி.,க்கள், 80 டி.எஸ்.பி.,க்கள் உள்ளிட்ட, 9,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கோவில் வளாகத்தில் மட்டும், 2,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு, தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளனர். கோவில் வரும் பக்தர்கள், பலத்த சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்படுகின்றனர். மேலும், போக்குவரத்து பணியில், 2,000 போலீசார் ஈடுபட்டுள்ளனர். நகரை சுற்றி, 18 சோதனை சாவடி அமைக்கப்பட்டுள்ளது. 61
இடங்களில் நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்த வசதி செய்யப்பட்டுள்ளன. 16 தற்காலிக பஸ் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. கிரிவலப்பாதை மற்றும் நகரின் முக்கிய பகுதிகளில், 35 கண்காணிப்பு கோபுரங்கள், 39 பாதுகாப்பு மையங்கள் அமைக்கப்பட்டு, குற்ற விழிப்புணர்வு குறித்து ஒரு லட்சம் நோட்டீஸ்கள் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. போலீசார் சார்பில், 147 கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படுகிறது. மலையேறும் பக்தர்களுக்கு உதவ, 100 சிறப்பு படை போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர்.