பறவை, விலங்கு முதலிய அனைத்து ஜீவராசிகளும் இருட்டைக் கண்டு பயப்படுகின்றன. பொழுது புலர்ந்ததும் மகிழ்ச்சியில் குயில், சேவல் என்று பறவையினங்கள் கீச்சிடுகின்றன. சோம்பல் முறித்து இரை தேடப் புறப்படுகின்றன. சூரியன் பயம் போக்குபவராகவும், உழைப்பின் சின்னமாகவும், வாழ்வின் ஆதாரமாகவும் விளங்குகிறார். சங்கு, சக்கரம், கதாயுதம், அபயஹஸ்தம் கொண்ட இவரே சூரியனார் கோவிலில் சூரிய நாராயணராகத் திகழ்கிறார். அபயஹஸ்தம் என்பதற்கு பயம் போக்கும் கை என்று பொருள். மற்ற தெய்வங்களை விட, கண் கண்ட தெய்வமான சூரியனுக்கு அபயக்கரம் இருப்பதே பொருத்தமானது. உயிர்களின் பயத்தை பறந்தோடச் செய்து ஒளி வீசித் திகழும் சூரியனுக்கு நிகரானவர் யாருமில்லை.