கடலுார்: கடலுார் மஞ்சக்குப்பம் பெண்ணையாற்றில் நடைபெற்ற ஆற்றுத் திருவிழாவில் 100க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து வந்த சுவாமிகளுக்கு நடைபெற்ற தீர்த்தவாரியை ஏராளமான பக்தர்கள் கண்டுகளித்தனர். பொங்கல் பண்டிகையின் 6ம் நாளான நேற்று ஆற்றுத்திருவிழா கொண்டாடப்பட்டது. கடலுாரில், பெண்ணையாற்றில் நடைபெற்ற விழாவிற்கு, கடலுார் பாடலீஸ்வரர் சுற்று வட்டார கிராமங்களில் இருந்தும் புதுச்சேரி மாநில எல்லை கிராமங்களில் உள்ள 100க்கும் மேற்பட்ட கோவில்களில் இருந்தும் சுவாமி அலங்கரித்து ஊர்வலமாக பெண்ணையாற்றுக்கு அழைத்து வரப்பட்டு சிறப்பு தீர்த்தவாரி மற்றும் தீபாராதனை நடந்தது. இந்த தீர்த்தவாரி உற்சவத்தை கடலுார் மாவட்டம் மற்றும் புதுச்சேரி மாநிலத்தில் பெண்ணை ஆற்றங்கரை ஓர கிராம மக்கள் ஆயிரக்கணக்கில் திரண்டு வந்து கண்டுகளித்தனர். ஆற்றுத் திருவிழாவையொட்டி பெண்ணையாற்றில் ஏராளமான கடைகள் மற்றும் சிறுவர்கள் விளையாடி மகிழ்ந்திட ராட்டினம் உள்ளிட்ட பொழுதுபோக்கு அம்சங்களும் இடம் பெற்றிருந்தது. மேலும் ஆற்றுத் திருவிழாவில் மட்டுமே விற்பனை செய்யப்படும் சிறுவள்ளிக் கிழங்கு அதிகளவு விற்பனையானது.
பண்ருட்டி: கெடிலம் ஆற்று திருவிழா, கண்டரக்கோட்டை தென்பெண்ணையாற்று தீர்த்தவாரி திருவிழா நடந்தது. விழாவில் 100க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து உற்சவர் சுவாமிகள் வீதியுலா வந்து ஆற்றங்கரையில் தீர்த்தவாரி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இதில் லட்சக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு விழாவை கொண்டாடினர். சிறுவர்கள் விளையாடுவதற்கு புதிய ரக ராட்டினங்கள் அமைக்கப்பட்டிருந்தன. போக்குவரத்து துறை சார்பில் சிறப்பு பஸ்கள் விடப்பட்டன.