பழநி: தைப்பூசத்தை முன்னிட்டு பழநியில் குவியும் பாதயாத்திரை பக்தர்கள் நீராட போதிய தண்ணீர் இல்லாததால் இடும்பன்குளத்தில் தேங்கியுள்ள கழிவுநீரில் குளிக்கின்றனர். பழநி தைப்பூச திருவிழாவை முன்னிட்டு பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் வருகின்றனர். இவர்கள் புனித சண்முகநதி, இடும்பன்குளத்தில் குளித்துவிட்டு தண்டாயுதபாணிசுவாமி மலைகோயிலுக்கு செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். இவ்வாண்டு போதிய மழை இல்லாததால் சண்முகநதி, இடும்பன்குளம் உள்ளிட்ட பல நீர்நிலைகள் வறண்டுள்ளது.
கழிவுநீர் குளியல்: பக்தர்கள் குளிக்க இடும்பன்குளத்தில் கோயில் நிர்வாகத்தினர் இரண்டு தொட்டிகளில் தண்ணீர் நிரப்புகின்றனர். இதுபோதுமானதாக இல்லை. இதனால் இடும்பன்குளத்தில் பலமாதமாக குப்பை, பாலிதீன், உணவு கழிவுகள் தேங்கிய தண்ணீரில் பக்தர்கள் குளிக்கின்றனர். அதிகாரிகள் அலட்சியம்: திண்டுக்கல் கலெக்டர் வினய் இடும்பன்குளத்திலுள்ள கழிவுகளை அகற்றி சுத்தம்செய்ய பொதுபணித்துறையினருக்கு அறிவுறுத்தினார். அப்படி இருந்தும் இதுவரை குளத்தில் கழிவுநீர், குப்பை இன்னமும் அகற்றப்படாமல் உள்ளது. கழிவுநீர், குப்பையை அப்புறப்படுத்தவும், கூடுதல் தண்ணீர் வசதி செய்யவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.