பதிவு செய்த நாள்
18
பிப்
2017
10:02
கிராமங்களில் பலவித தொழில் செய்வோர்க்கு உழைப்பிற்கான பங்காக வழங்கப்பட்ட தவசம் தற்போது வரலாற்றின் நினைவு சின்னமாகிவிட்டது. ஆதிமனிதர்கள் தங்களை செம்மைப்படுத்திகொண்டு, விவசாயம் கால்நடைகள் வளர்ப்பு என தொழில்களில் ஈடுபட்டனர். ஆனால் அனைவரும் ஒரே தொழிலில் ஈடுபட்டால், தேவைகளை ஈடு செய்ய முடியாது. இதனால், மனித சமுதாயத்தினர் பலகூறுகளாக பிரிந்து, பொதுவான விளைச்சலுக்கும், மனிதகுல மேம்பாட்டுக்கும் தேவையான பல தொழில்களில் ஈடுபட்டனர். விவசாயம் செய்ய ஒரு பிரிவினரும், இதற்கு தேவையான கருவிகளை செய்ய ஒரு தரப்பினரும், வீடுகளை கட்டித்தர ஒரு பிரிவினரும், இதர தேவைகளை பூர்த்தி செய்ய பல பிரிவினரும், என தொழில்கள் அடிப்படையில் பிரிந்து ஒருவரின் தேவைகளை மற்றொருவர் ஈடுசெய்தனர்.
இதனால் ஒவ்வொரு தரப்பினரும் தங்கள் தொழில்களில் முழுமையான கவனம் செலுத்தி தானிய விளைச்சலை பெருக்கினர். இதற்கு ஈடாக, விளைந்த தானியங்களை ஆண்டுக்கு ஒரு முறை அனைவரும் பங்கிட்டுக்கொண்டனர்.இதுபோல் தானியங்கள் பங்கிடுவதை தவசம் என குறிப்பிட்டனர். காலச்சக்கரம் சுழல, சுழல உழைப்புக்கு தகுந்த அளவு தானியம் அளந்து கொடுக்கப்பட்டது. பின்னாளில் இதுதான் கூலியாகவும், சம்பளமாகவும் மாற்றம் பெற்றது. கடந்த நுாற்றாண்டு வரை இந்த தவசம் வழங்கும் முறை கிராமங்களில் நடைமுறையில் இருந்தது.
வள்ளம்: அறுவடைக்கு பின், களத்து மேட்டில் தானியங்களை குவித்து வைத்து, வள்ளம் என்ற அளவையை பயன்படுத்தி இதர தொழிலில் ஈடுபட்டவர்களுக்கான பங்கை அளந்து கொடுத்தனர். ஐந்து கிலோ அளவு தானியங்கள் கொள்ளளவு கொண்டதாகவும், இரண்டு அடி உயரம், ஒரு அடி சுற்றளவில் வள்ளம் இருக்கும். கடந்த நுாற்றாண்டில் இரும்பிலும், அதற்கு முந்தைய காலத்தில் மரத்திலும் இந்த வள்ளத்தை உருவாக்கி பயன்படுத்தினர். இந்த தவசம் தை மாதத்தில் அனைவருக்கும் வினியோகம் செய்யப்பட்டது.மடத்துக்குளம் பகுதியிலுள்ளவர்கள் கூறுகையில், மடத்துக்குளம் தாலுகா பகுதியிலுள்ள தாமரைபாடி, நாட்டுக்கல்பாளையம் கண்ணாடிப்புத்துார், கடத்துார் போன்ற பூர்வீக கிராமங்களில், 1970 ஆண்டு, வரை தவசமுறை நடப்பில் இருந்தது. நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் ஏற்பட்ட மாற்றங்களாலும், இதர தொழில் வளர்ச்சியாலும் மெல்ல மெல்ல மறைந்து போனது, என்றனர்.
-நமது நிருபர்-