பதிவு செய்த நாள்
18
பிப்
2017
11:02
திருப்பூர் :கருப்பகவுண்டம்பாளையம் செல்வ விநாயகர்,ஸ்ரீ காமாட்சியம்மன், ஸ்ரீ மீனாட்சியம்மன் கோவில், கும்பாபிஷேக விழா நேற்று கோலாகலமாக நடைபெற்றது.திருப்பூர், வீரபாண்டி, கருப்பகவுண்டம்பாளையத்தில் உள்ள நூற்றாண்டு பழமை வாய்ந்த காமாட்சியம்மன் கோவில் திருப்பணி முடிந்து, நேற்று கும்பாபிஷேக விழா நடந்தது. கடந்த, 15ம் தேதி மகா கணபதி யாகத்துடன் யாகசாலை பூஜைகள் தொடங்கியது. மாலையில், முதல்கால யாக பூஜை, திரவ்யாகுதி, பூர்ணாகுதி தீபாராதனை நடைபெற்றது. 16ல், இரண்டாம் கால யாகபூஜையும், மூல மந்திர ஹோமும், கோபுர கலசம் பிரதிஷ்டை நிகழ்ச்சியும், பரிவார தெய்வங்களுக்கு அஷ்டபந்தன மருந்து சாற்றும் நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.
மாலையில், மூன்றாம் கால யாக பூஜையும், திருமுறை பாராயணம், விக்ரகங்களுக்கு, அஷ்டபந்தன மருந்து சாற்றும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. நேற்று காலை, 5:00 மணிக்கு, நான்காம் கால யாக பூஜையும், நாடிசந்தானம், தர்ப்பை கயிறு மற்றும் பட்டு நூல் வாயிலாக, மூல விக்ரகத்துக்கு சக்தி கொடுக்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. காலை, 6:30 மணிக்கு யாகசாலையில் இருந்து தீர்த்தக்குடங்கள் புறப்பட்டு சென்று, காலை, 7:35 மணிக்கு, விநாயகர், காமாட்சியம்மன், மீனாட்சி அம்மன் கோபுரம் மற்றும் கோபுரங்களுக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. கோவில்வழி மருதாசல குருக்கள் தலைமையிலான சிவாச்சார் யார்கள், கும்பாபிஷேகம் செய்வித்தனர். தொடர்ந்து, தசதானம், தசதரிசனம், அலங்காரம், மகா தீபாராதனை நடைபெற்றது.