பதிவு செய்த நாள்
07
மார்
2017
04:03
தற்போது திருப்பெருந்துறைக்கு ஆவுடையார் கோயில் என்று பெயர். இத்தலத்திற்கு அனாதி மூர்த்தித்தலம், ஆதி கயிலாயம், உபதேசத்தலம், சதுர்வேதிபுரம், ஞானபுரம், யோகபீடபுரம், குருந்தவனம் எனப் பல பெயர்கள். சிவபுரம் என்றும் திருவாசகம் கூறும். சிவநாமம் எனும் நல்ல தோணியைப் பற்றினால் சிவமுத்தி அடையலாம் என்பதால் திருப்பெருந்துறை எனப்பட்டது.
வெம்பிறவி வேலைதனில்
வீழ்பவர்கள் எல்லாம்
நம்புசிவ நாமமெனும்
நற்புணைப் பிடித்தால்
எம்பரன் அருட்கரையில்
ஏறுதுறையாமால்
அம்புவி மொழிந்துள
பெருந்துறை அதன் பேர்
என்று திருவாதவூர் புராணம் இதை எடுத்தியம்புகிறது.
சிவன் பெயர் ஆத்மநாதர்; அம்பிகை சிவயோகாம்பிகை. உருவமல்லாது அருவ அமைப்பு. சிவனில் லிங்க பாணம் இல்லை; ஆவுடையார் மட்டுமே குவளைசாற்றி அலங்கரிப்பார்கள். அம்பிகைக்கும் உருவம் இல்லை; யோகபீடத்தில் அம்பிகையின் பாதங்களே உள்ளன. கொடிமரம், பலிபீடம் நந்தி, சண்டிகேசரும் இல்லை. அருவமாயிருப்பதால் அவை இல்லை தியானம் செய்யும் போது அகமுகப் பார்வையே நந்தி; மூலாதாரத்திலிருந்து மேலேறும் குண்டலினியே கொடிமரம்; மார்பே (மணிபூரகமே) பலிபீடம் என்ற தத்துவம். மற்ற கோயில்கள் சரியை, கிரியா யோகத்திற்கு உரியதாக இருக்க, இக்கோயில் யோக, ஞான மார்க்கத்திற்கு உகந்த கோயில்.
ஆவுடையாருக்குப்பின் சுவரில் 27 நட்சத்திர தீபங்களும், சூரிய, சந்திர, அக்னி ஆகிய மூன்று தீபங்களும் மிளிர்கின்றன. எதிரே அமுத மண்டபத்தில், படைக்கல்லில், புழுங்கலரிசி அன்னத்தை ஆவி புலப்படப்பரப்பி, அதனைச் சூழ தேன்குழல், அதிரசம், அபயம், வடை வைத்து நிவேதித்து தீபாராதனை செய்கிறார்கள். குருந்த மரமே தலமரம். ஆத்மநாதர் கருவறைக்குப் பின்னே, பிராகார மண்டபத்தில் ஆத்மநாதர், குருந்த மூலஸ்வாமி, அவர் எதிரே மாணிக்கவாசகர் உபதேசம் பெறும் வடிவங்கள் உள்ளன. விழாக்காலங்களில் இம்மூர்த்திக்கு எதிரே மாணிக்கவாசகரை எழுந்தருளச்செய்து உபதேசக்காட்சி நடைபெறும்.
முதல் பிராகார தென்மேற்கு மூலையில் மாணிக்கவாசகரின் உற்சவமூர்த்தி சன்னிதி உள்ளது. உற்சவம் யாவும் இந்த மாணிக்கவாசக மூர்த்திக்கே பக்தோற்சவம் என்று பெயர். கயிலைமலை துவாதாசாந்தத் தலமென்றால், ஆத்மநாத தலம், சோட சாந்தத் தலம். ஆதியந்தம் இல்லாத்தலம். இத்தலத்தை அடைந்தவருக்கு மீண்டும் பிறப்பு இல்லை. இத்தலத்தில் தர்மம் செய்தால் அது கோடியாகப் பலன் தரும். பல தீர்த்தங்கள் உள்ளன. சிவதீர்த்தம், ஆத்மகூபம் என ஒரு கிணறு, ஆத்மநாதர் அபிஷேகத்துக்கு மட்டும் பயன்படுத்தப்படுகிறது.
இத்தலத்தில் நுழைந்த திருவாதவூரருக்கு ஒருவித சிவன்கோயில் உணர்வு உதித்தது. அமைச்சர் வந்துள்ளாரென்று கோயில்வேதியர்கள் கோயில்ச் சிறப்பைக் கூறினர். அதைக்கேட்ட மாணிக்கவாசகர் ஆனந்தமுற்றார். மறுநாள் கோயில் சென்ற போது, ஒவ்வொரு பொருளும் இறைவனாகத் தோன்றின. சர்வம் சிவமயம்தானே. ஆங்கே ஒரு குருந்த மரத்தடியில் மாணாக்கர்கள் இருக்க, ஆசிரியர் தட்சிணாமூர்த்தி கோலம் கண்டு மெய்சிலர்த்தார். ஆனந்தக்கண்ணீர் வழிய ஆசான் அடிபணிந்து தன்னை ஆட்கொள்ள வேண்டினார். இறைவனான ஆசான், கண்ணாலும் ஸ்பரிசத்தாலும் வாக்காலும் அருளுபதேசம் செய்து சீடனாக்கி தீட்சை அளித்து ஆட்கொண்டான். பேரானந்தம் பெற்ற வாதவூரர், சிவகுருவை இனிய மொழிகளால் போற்றித் துதித்து வணங்கினார்.
அம்மொழிகள் யாவும் மாணிக்கம் போன்று ஒளிர்ந்ததால், மாணிக்க வாசகம் என்று புகழ்ந்து, இப்பெருந்துறையில் நன்கு கோயில் அமைத்து பணிபுரி என்று கூறி மறைந்தார். வேதியர்கள் கோயில் நிர்மானத்தை உவந்து ஏற்க, தான் குதிரை வாங்க கொணர்ந்த பணத்தை கோயில் மேம்பாட்டுக்கு செலவழித்தார். இதனைக்கண்டு, அவருடன் மதுரையிலிருந்து வந்த சிலர் மன்னனிடம் சென்று கூற, மன்னன் தூதர்களை அனுப்பி திருவாதவூரை குதிரைகளுடன் வருமாறு பணிக்கச் சொன்னான். தூதர்கள் வந்து வாதவூரரிடம் விவரம் கூற, அவர் சிவனைப் பணிந்தார். ஆவணி மூலத்தன்று குதிரைகள் வந்து சேரும் என்று கூறுமாறு சிவன் உணர்த்த, அவ்வாளே திருவாதவூரர் தூதர்களிடம் சொல்ல, அவர்கள் திரும்பிச்சென்று மன்னனுக்கு உரைத்தனர்.
ஆவணி மூலத்திற்கு இரண்டு நாள் இருக்கும் நிலையில், சிலர் அரசரிடம் சென்று, வாதவூரர் கூறியது பொய். அவர் கோயில் புனரமைப்புக்கு பணத்தைச் செலவிட்டார் என்றதும், மன்னன் வாதவூரை சிறையிலடைத்தான். இரவு சிவபெருமான் நரிகளைப் பரிகளாக்கி (குதிரைகள்) அரண்மனையில் சேர்த்தார். இதுகண்டு அரசன் வியந்து மாணிக்கவாசகரிடம் மன்னிப்பு கேட்டான். ஆயினும் நள்ளிரவில் பரிகள் யாவும் மீண்டும் நரிகளாக மாறி, அரண்மனையிலிருந்த குதிரைகளை நாசமாக்கின. இதுகண்டு மன்னன் சினம்கொண்டு வாதவூரரை சுடுமணலில் நிற்க வைத்தான். திடீரென மேகங்கள் சூழ்ந்து வைகையில் வெள்ளம் வர மன்னன் திகைத்தான். வீட்டுக்கு ஒரு ஆள்வந்து கரையை உயர்த்தக் கட்டளையிட்டான்.
அப்போது சிவபெருமானே வந்தி என்ற முதிய பெண்மணிக்காக கூலியாளாக வந்தார். ஆனால் வேலை செய்யாமல் தூங்கவே, மன்னன் அவர் முதுகில் பிரம்பால் அடித்தான். அவ்வடி மன்னன் உட்பட அனைவர் மீதும் விழுந்தது. வாதவூரை விடுவிக்கவே இந்த லீலை என்பதை உணர்ந்து அவரை விடுவித்து மன்னிப்பு கேட்டான். வாதவூரர் அமைச்சர் பதவியிலிருந்து விலகி, துறவியாகி தலங்கள்தோறும் சென்று தூய தமிழில் திருவாசகம் பாடினார்.
சிவபுராணம் 95 வரிகளைக் கொண்டது. 95-ன் கூட்டுத் தொகை 5. இது பஞ்சாட்சரத்தை உணர்த்துவது.
நமச்சிவாய வாழ்க நாதன்தாள் வாழ்க - என்று தொடங்குகிறார். நமசிவாய என்பது ஸ்தூல சிவ பஞ்சாட்சரம். இது இம்மை, மறுமைப் பயன் அளிக்கும். சிவாயநம என்பது சூட்சும பஞ்சாட்சரம். இதை சிந்திப்பவர்களுக்கு ஒரு அபாயமும் இல்லை. சிவாய சிவ என்பது ஆதி பஞ்சாட்சரம். முக்தியை அளிக்கும் சிவா என்றால் தேவி. எனவே சிவசக்தி பஞ்சாட்சரம் என்றும் கூறுவர். சிவ சிவ என்பது மகா காரண பஞ்சாட்சரம். சிவத்துடன் அருள்சேர்ந்து இன்பம் அளிக்கும். இவ்வாறாக அருளும் சிவனின் தாள் வாழ்க என துவங்குகிறார். பாத அருள் பெற்றவராயிற்றே!
சிவனவன் சிந்தையுள் நின்ற அதனால்
அவன் அருளாலே அவன் தாள் வணங்கி
சிந்தை மகிழச் சிவ புராணம் தன்னை
முந்தை வினை முழுதும் ஓய உரைப்பன்
யான். (17-20)
சிவன் மனதுள் நிலைத்ததால், அவன் அருளாலேயே அவன் தாள் வணங்கி, முந்தை வினைகளைக் களைய சிவபுராணம் கூறுகிறேன் என்கிறார்.
சிறந்த அடியார் சிந்தனையுள் தோன்றி நின்று
பிறந்து பிறப்பு அறுக்கும் எங்கள் பெருமான்.
சிறந்த அடியார்களின் மனதில் இருந்து மீண்டும் பிறத்தல் எனும் தொடரை அறுப்பவன் அவன் என்கிறார்.
ஈர்த்து என்னை ஆட்கொண்ட பெருமானே!
வாவென்று என்னை வலிய இழுத்து அருளிய சிவனே.
சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்வார்
செல்வர் சிவபுரத்தின் உள்ளார் சிவன் அடிக்கீழ்
பல்லோரும் ஏத்தப் பணிந்து.
சிவனை பொருளுணர்ந்து துதிப்பவர்கள் சிவபுரம் -சிவனடியையே ஏகுவர்.
போற்றித் திரு அகவல் 245 அடிகள் கொண்டது. 1 முதல் 85 அடிகள் வரை இறைவன் திருவடிப் பெருமை கூறுகிறார். 86 முதல் 245 அடிகள் வரை மந்திர மொழிகளால் போற்றுகிறார். அஷ்டோத்திரம் போல் மலரிட்டு அர்ச்சிக்கலாம்.
ஒரு சில நினைப்போமா...
அத்தா போற்றி ஐயா போற்றி
நித்தாபோற்றி நிமலா போற்றி
புத்தா போற்றி பவனே போற்றி.
போற்றி போற்றி புயங்கப் பெருமான்
போற்றி போற்றி புராண காரண
போற்றி போற்றி சய சய போற்றி.
கடைசி பாவையில் சிவனது பாதமலர்களையே ஒவ்வொரு அடியிலும் போற்றுகிறார்.
போற்றி அருளுக என் ஆதியாம் பாதமலர்
போற்றி அருளுக என் அந்தமாம் செந்தளிர்கள்
போற்றி எல்லா உயிர்க்கும் தோற்றமாம் பொற்பாதம்
போற்றி எல்லா உயிர்க்கும் போகமாம்
பூங்கரங்கள்
போற்றி எல்லா உயிர்க்கும் ஈறாம் இணையடிகள்
போற்றி மால் நான்முகனும் காணாத புண்டரீகம்
போற்றி யாம் உய்ய ஆட்கொண்டருளும்
பொன்மலர்கள்
போற்றியாம் மார்கழி நீராடேலோ ரெம்பாவாய்.
ஆண்டாள் மார்கழி என்று திருப்பாவையில் ஆரம்பித்தாள். மாணிக்கவாசகர் திருவெம்பாவையில் மார்கழி என்று முடிக்கிறார். மார்கழியில் இவை இரண்டும் பாடுவோமே.
மாணிக்கவாசகர் அந்த சிவப்பரம் பொருளுக்கே பத்து பாக்களால் திருப்பள்ளி எழுச்சி பாடுகிறார்.
முதல் பாடலை ரசிப்போமா.
போற்றி என் வாழ்முதலாகிய பொருளே
புலர்ந்தது பூங்கழற் கிணைதுணை
மலர்கொண்டு
ஏற்றி நின் திருமுகத்து எமக்கு
அருள் மலரும்
எழில் நகை கொண்டு
நின் திருவடி தொழுகோம்
சேற்றிதழ் கமலங்கள் மலரும்
தன் வயல் சூழ்
திருப்பெருந்துறை
உறை சிவபெருமானே
எற்றுயர் கொடியுடையாய்
எமை உடையாய்
எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே!
தனக்கு திருப்பெருந்துறையான் அருளியதை கசிந்து, நினைந்து, நெக்குருகி மாணிக்கவாசகர் பாடுவதாய், நாமும் அவர் நிலையிலிருந்து பாடினால் நமது மனமும் இளகும். பக்தியில் உருகும் என்பதில் சந்தேகமில்லை. பானைச்சோற்றுக்கு ஒருபதம் பார்த்தல் போன்று ஒருசில மாணிக்க வாசகங்களை நினைத்தோம். ஆழ்ந்த சிவனடியார்களுக்கு அவர் பாடிய 658 பாடல்களையும் வாசித்து பேரின்பம் அடையத் தோன்றும் என்பதில் ஐயமுண்டோ.