பதிவு செய்த நாள்
25
மார்
2017
11:03
திருத்தணி, திருத்தணி முருகன் கோவிலுக்கு சொந்தமான அறைகள் மற்றும் குடில்கள் வாடகை திடீரென அதிகரிக்கப்பட்டுள்ளது. பராமரிப்பு மற்றும் அடிப்படைவசதிகள் ஏற்படுத்துவதற்காக உயர்த்தப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. திருத்தணி முருகன் கோவிலுக்கு, தினமும், ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து, மூலவரை தரிசித்து செல்கின்றனர். வெளியூரிலிருந்து வரும் பக்தர்கள், இங்கு தங்கி சுவாமியை வழிபட வசதியாக, கோவில் நிர்வாகம் சார்பில், குறைந்த வாடகையில் குடில்கள், அறைகள் கட்டி, 1973 முதல், வாடகைக்கு விடப்பட்டு வருகிறது.தேவஸ்தான விடுதி பேருந்து நிலையம் அருகில், தணிகை இல்லம், அரக்கோணம் சாலையில் கார்த்திகேயன் குடில், திருக்குளம் அருகில், சரவணபொய்கை என, மூன்று இடங்களில், தேவஸ்தான விடுதிகள் கட்டப்பட்டுள்ளன. இந்த விடுதிகளில், 58 குளிர்சாதன குடில், 33 சாதாரண குடில், 133 அறைகள் உள்ளன.
துவக்கத்தில், சாதாரண குடிலுக்கு, 50 ரூபாயும், அறைக்கு, 15 ரூபாய் வீதம் பக்தர்களுக்கு வாடகை விடப்பட்டது. நாளடைவில், அப்போதைய சூழலுக்கு ஏற்ப, வாடகை உயர்த்தப்பட்டது. கடந்த, 20ம் தேதி வரை, நாள் ஒன்றுக்கு, குளிர்சாதன குடிலுக்கு, 1,000 ரூபாயும், சாதாரண குடிலுக்கு, 600 ரூபாயும், அறைக்கு, 300 ரூபாயும் என, கோவில் நிர்வாகம் கட்டணம் வசூலித்து வந்தது. இந்நிலையில், 21ல் இருந்து, குடில்கள் மற்றும் அறைகளின் பராமரிப்பு செலவுகள், மின்கட்டணம் உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, இந்து அறநிலைய துறை ஆணையரிடம் இருந்து உத்தரவு பெற்று, குடில்கள் மற்றும் அறைகளின் வாடகை உயர்த்தப்பட்டுள்ளது. நாள் ஒன்றுக்கு, குளிர்சாதன குடிலுக்கு, 1,500 ரூபாயும், சாதாரண குடிலுக்கு, 800 ரூபாயும், அறைக்கு, 400 ரூபாயும் என, வசூலிக்கப்படுகிறது. ஆனால், குடில்கள் மற்றும் அறைகளில், போதிய அளவு அடிப்படை வசதி ஏற்படுத்தவில்லை என, பக்தர்கள் தரப்பில் கூறப்படுகிறது.
கட்டாயம்: இது குறித்து, கோவில் அதிகாரி ஒருவர் கூறியதாவது: தேவஸ்தான குடில், அறைகள் வாடகை பல ஆண்டுகளாக உயர்த்தப்படாமல் இருந்தது.
திருச்செந்துார், பழநி, ஸ்ரீரங்கம் மற்றும் சமய புரம் கோவில்களில் வசூலிக்கப்படுவதை விட, இங்குள்ள குடில், அறைகளில் குறைந்த வாடகை தான் வசூலிக்கப்படுகிறது. மின் கட்டணம், சுகாதாரம், மராமத்து பணிகள் மற்றும் பராமரிப்பு செலவுகள் அதிகரித்து வருவதால், வேறு வழியின்றி வாடகை உயர்த்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. பக்தர்கள் கூறும் குறைகள் அனைத்தும், விரைவில் நிறைவேற்றப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
நான்கு முறை வாடகை உயர்வு விபரம்
ஆண்டு ஏசி குடில் சாதாரண குடில் அறை
(ரூபாயில்) (ரூபாயில்) (ரூபாயில்)
1985 - 50 15
1996 350 160 80
2006 1,000 600 300
2017 1,500 800 400
அடிப்படை வசதிகள் ஏற்படுத்த வேண்டும்: கோவில் நிர்வாகம் உயர்த்தியுள்ள வாடகையை, நாங்கள் எதிர்க்கவில்லை; விலை உயர்வு கட்டணம் கோவில் வளர்ச்சி பணிகளுக்கு செல்வதால், பக்தர்களாகிய நாங்கள் சந்தோஷமாக கொடுக்கிறோம். அதே நேரத்தில், குடில்கள் மற்றும் அறைகளில், ஏசி வேலை செய்யவில்லை; சுடுநீர் வருவதில்லை; அடிப்படை வசதிகள் நிறைவாக இல்லை. இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். எஸ்.எஸ்.முத்து
பக்தர், திருத்தணி
நடுத்தர பக்தர்கள் பாதிக்கப்படுவர்: தனியார் விடுதிகளில் கட்டணம் அதிகம் என்பதால் தான், தேவஸ்தான விடுதிகளில் தங்குகின்றனர். தற்போது, வாடகை உயர்வால், நடுத்தர பக்தர்கள் பாதிக்கப்படுவர். மேலும், பக்தர்களின் பாதுகாப்பிற்காக விடுதிகளின் நுழைவு வாயில் மற்றும் முக்கிய இடங்களில் கண்காணிப்பு கேமரா வைக்க வேண்டும். அ.முனுசாமி பக்தர், காந்தி நகர்