பதிவு செய்த நாள்
25
மார்
2017
12:03
தம்மம்பட்டி: ஜங்கமசமுத்திரம் ஏரியில் மழை வேண்டி சிறப்பு யாகம் நடந்தது. தம்மம்பட்டி அருகே, ஜங்கமசமுத்திரத்தில், சின்ன அண்ணன், பெரிய அண்ணன் என, இரு ஏரிகள் அடுத்தடுத்து உள்ளன. தம்மம்பட்டி பேரூராட்சிக்கு, குடிநீர் மற்றும் விவசாய நிலத்தின் முக்கிய பாசன நீராதாரமாக உள்ளது. தற்போது, பருவ மழையின்றி, ஏரி முழுவதும் வறண்டு கிடப்பதால், கால்நடைகளுக்கு கூட தண்ணீர் இல்லாத நிலை உள்ளது. கோடை வெயில் தாக்கத்தால், மக்கள் அவதிக்குள்ளாகின்றனர். இரு ஆண்டுகளாக பருவ மழை பொய்த்ததால், கிணறுகளில் நீர்மட்டம் குறைந்து வறண்டுபோனது. இதனால், குடிநீரை தேடி அலையும் நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். இதனால், மழை பெய்ய வேண்டி, ஜங்கமசமுத்திரம் ஏரியில், நேற்று முன்தினம், 108 சங்காபிஷேகம், சிறப்பு யாகம் நடந்தது. கழுத்தளவு தண்ணீர் நிரப்பி, வருண ஜெபம் நடந்தது. சிவாச்சாரியர்கள் பூஜை செய்தனர். இதில், மக்கள் பலர் பங்கேற்று, வழிபாடு செய்தனர்.