பதிவு செய்த நாள்
29
மார்
2017
10:03
மதுரை: தெலுங்கு புத்தாண்டையுகாதி என்று குறிப்பிடுவர். யுகாதி என்றால் ஆண்டின் தொடக்கம். யுக்மம் என்ற சொல்லில் இருந்து இது பிறந்தது. இதற்கு யோகம் அல்லது இணைப்பு என்ற பொருள் உண்டு. மேஷ ராசியில் சூரியனும், சந்திரனும் இணையும் நாளே, தெலுங்கு புத்தாண்டின் துவக்க நாளாக உள்ளது. இன்று தேவுபெல்லா என்ற பச்சடியை அறுசுவையுடன் தயாரித்து சூரியனுக்குப் படைப்பர். இதில் வெல்லம், வேப்பம்பூ, புளி, மிளகாய், மிளகு, உப்பு, மாங்காய் சேர்க்கப்பட்டிருக்கும். இவை மகிழ்ச்சி, வருத்தம், கோபம், பயம், சலிப்பு, ஆச்சரியம் ஆகிய உணர்ச்சிகளைக் குறிக்கிறது. வாழ்க்கையில் இவையெல்லாம் வந்து போகும். இந்த பச்சடியை சாப்பிட்டதும் ஜீரணிப்பது போல, இந்த உணர்வுகளையும் ஜீரணிக்கும் ஆத்மபலத்தை சூரிய பகவான் அருள வேண்டும் என்று வேண்டுவர்.
இதை ஒட்டி திருப்பதியில் ’யுகாதி ஆஸ்தானம்’ என்னும் சிறப்பு வழிபாடு நடக்கும். கோவில் முழுவதும் மலர் அலங்காரம் செய்யப்பட்டு, ஏழுமலையானுக்கு சுப்ரபாதம், அபிஷேகம், தோமாலை சேவை நடத்தப்படும். ஸ்ரீதேவி, பூதேவி தாயாருடன் உற்ஸவர் மலையப்ப சுவாமிக்கு அபிஷேகம் நடக்கும். ஜீயர் சுவாமிகள் ஊர்வலமாக எடுத்து வரும் பட்டு வஸ்திரம் அணிவிக்கப்படும். ஆஸ்தான பண்டிதர்கள் பஞ்சாங்கம் படித்து புத்தாண்டு பலன் கூறுவர். ராமாயண சொற்பொழிவும் நடக்கும். ராமாயணம் கேட்டால் புத்தாண்டு சுபிட்சமாக அமையும்.
இந்த நன்னாளில், மொல்லா என்னும் பெண் புலவர் தெலுங்கில் எழுதிய ’மொல்லா’ ராமாயணத்தைப் படித்தால், ராமபிரானின் அருள் கிடைக்கும். ’மொல்லா’ என்றால், ’முல்லைப்பூ’. கிருஷ்ண தேவராயரின் அவையில் அரங்கேற்றப்பட்ட இதில், வால்மீகி சொல்லாத ஒரு தகவல் இடம் பெற்றுள்ளது. சீதையுடன் காட்டுக்குச் சென்ற ராமர் ஓடக்காரனான குகனிடம், கங்கையைக் கடக்க உதவும்படி ண்டினார். ராமர் மீது மிகுந்த பக்தி கொண்ட குகனுக்கு பயம் ஏற்பட்டது. “சுவாமி... தங்களின் பாதத்துாசு பட்டு, ஒரு கல் அழகிய பெண்ணாக மாறி விட்டதென கேள்விப்பட்டிருக்கிறேன். அது போல, என் படகும் பெண்ணாகி விட்டால், பிழைப்புக்கு என்ன செய்வேன்?” எனக் கேட்டான். எனவே அவரது பாதத்தில் சிறு துாசு கூட இல்லாமல், கங்கை நீரில் கழுவும்படி வேண்டினான். ராமரும் அதன்படியே கால்களைக் கழுவி விட்டு படகில் ஏறினார். ’இப்படியும் ஒரு நம்பிக்கையுள்ள பக்தனா?’ என சீதையும், லட்சுமணனும் வியந்தனர். ராமனின் மீது நம்பிக்கை வைத்தால், வாழ்க்கை இனிக்கும் என்பது, இந்த சம்பவம் மூலம் தெரிய வருகிறது.