கும்பகோணம் கோயிலில் ராமநவமி விழா கொடியேற்றத்துடன் தொடக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
28மார் 2017 04:03
தஞ்சாவூர்: தென்னக அயோத்தி என போற்றப்படும் கும்பகோணம் ராமசுவாமி கோயிலில், ராமநவமி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
கும்பகோணத்தில் உள்ள ஐந்து முக்கிய வைணவத் திருக்கோயில்களுள் ஒன்றாக கும்பகோணம் ராமசுவாமி திருக்கோயில் திகழ்கிறது. தஞ்சையை ஆண்ட ரகுநாத நாயக்க மன்னரால் சுமார் 400 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட பழமையானது இத்திருக்கோவிலாகும். தென்னக அயோத்தி எனப் புகழப்படும் இந்த கோயிலின் சன்னிதியில் பட்டாபிஷேக மூர்த்திகளாய் ராமனும், சீதாதேவியும் ஒரே சிம்மாசனத்தில் அமர்ந்திருக்க, சத்ருகனன் சாமரம் வீச, லட்சுமணன் ராமனின் வில் மற்றும் தன் வில்லை ஏந்தி இருக்க, பரதன்குடை சமர்பிக்க, அனுமன் ஒரு கையில் வீணை மறு கையில் ராமாயண சுவடியை ஏந்திய நிலையில் ராமரின் திருவடியில் பிரார்த்திக்கும் மிக உன்னதமான நிலையில் பக்தர்களுக்கு ராமன் அருள்பாலிக்கிறார்.
சிறப்புகள் பெற்ற இக்கோயிலில் ராமநவமி விழா கொடிமரத்துக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பின்னர் மங்களவாத்தியம் முழங்க கொடியேற்றம் நடைபெற்றது. இவ்விழாவில் முக்கிய விழாவாக கருடசேவை வருகிற மார்ச் 31ம்தேதியும், திருத்தேரோட்டம் ஏப்.5ம் தேதியும், விடையாற்றி விழா ஏப். 7 ம் தேதி நடைபெற உள்ளது.