பதிவு செய்த நாள்
24
ஏப்
2017
01:04
குன்னுார்: குன்னுார் அருகே கரன்சி வனப்பகுதியில் மாசாணியம்மன் கோவில் திருவிழா நடந்தது. குன்னுார் அருகே கரன்சி பகுதியில் மாசாணியம்மன் கோவில் அமைந்துள்ளது. கோவிலின், 20ம் ஆண்டு திருவிழா கடந்த, 21ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. மாலையில், தீர்த்தக்குடம் எடுக்கப்பட்டது. தர்மசாஸ்தா பஜனை குழுவினரின் பஜனை இடம் பெற்றது. தொடர்ந்து, சிங்காரா மாரியம்மன் கோவிலில் இருந்து கரகம் பாலித்து எடுத்து வரப்பட்டது. நேற்று முன்தினம் கஞ்சிவார்த்தல், சிறப்பு பூஜை, அம்மன் கரக ஊர்வலம்,தேர்திருவிழா ஆகியவை நடந்தன. நேற்று காலை புரூக் லேண்ட் ஆற்றோரத்தில் இருந்து பக்தர்கள் அலகு குத்தி, மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக கோவிலை வந்தடைந்தனர். அங்கு மாசாணியம்மனுக்கு சிறப்பு வழிபாடுகள், பூஜைகள் செய்யப்பட்டன. மேலும், இங்கு அம்மன் தொட்டில் அலங்காரத்தில் தாலாட்டு நடத்தப்பட்டது. விழாவில், சுற்றுப்புற, 15 கிராமங்களை சேர்ந்த மக்கள் திரளாக பங்கேற்றனர். மாலையில் அம்மன் கங்கையை சென்றடையும் நிகழ்ச்சி நடந்தது. வரும், 30ம் தேதி மறுபூஜையுடன் விழா நிறைவு பெறுகிறது. ஏற்பாடுகளை கோவில் கமிட்டியினர், விழா கமிட்டியினர் செய்திருந்தனர்.