பதிவு செய்த நாள்
29
ஏப்
2017
12:04
திருவண்ணாமலை: திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில் சித்திரை வசந்த உற்சவம், நேற்று மாலை பந்தக்கால் நடும் முகூர்த்த விழாவுடன் தொடங்கியது. திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆண்டுதோறும், சித்திரை மாதத்தில் பத்து நாட்கள் தொடர்ந்து நடக்கும், சித்திரை வசந்த உற்சவ விழா சிறப்புக்குரியது. அதன்படி, சித்திரை வசந்த உற்சவம் நேற்று தொடங்கியது. இதை முன்னிட்டு, நேற்று மாலை சம்பந்த விநாயகர், அருணாசலேஸ்வரர், உண்ணாமுலையம்மனுக்கு சிறப்பு அபி ?ஷகம் மற்றும் சிறப்பு பூஜை நடத்தப்பட்டு, சம்பந்த விநாயகர் சன்னதி எதிரில் மாலை, 4:50 மணிக்கு கன்னி லக்கினத்தில் பந்தக்கால் நடப்பட்டது.
மே, 8 வரை தினமும் அருணாசலேஸ்வரர், உண்ணாமுலையம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜை நடத்தப்படும். இரவில், சுவாமிக்கு மண்டகப்படி செலுத்தப்படும். நிறைவாக மே, 8 காலை, 10:00 மணிக்கு அய்யங்குளத்தில் தீர்த்தவாரியும், அன்று இரவு கோபால் விநாயகர் கோவிலில் மண்டகப்படியும், நள்ளிரவு, 12:00 மணிக்கு கோவில் மூன்றாம் பிரகாரத்தில் மன்மத தகனமும், வாண வேடிக்கையும் நடக்கும்.