பதிவு செய்த நாள்
09
மே
2017
12:05
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி சுந்தரராஜப் பெருமாள் தேவஸ்தானம், மதுரை அழகர் கோவில் விழாக்களைப் போன்றே வருடம் முழுவதும் நடப்பது சிறப்பாகும். பழம் பெரும் கோயில்கள், கண்ணுக்கினிய கடற்கரை, கோட்டை, கொத்தளங்கள் கொண்ட கத்தியவார் தீபகற்பத்தைச் சேர்ந்த சவுராஷ்ட்ர தேசத்தில் நல்ல செல்வாக்குடன் வாழ்ந்து வந்தவர்கள் ஏறத்தாழ 900 ஆண்டுகளுக்கு முன் கஜினி முகம்மது படையெடுப்பால் தென் திசை நோக்கி புறப்பட்டனர். மராட்டிய மாநிலத்தில் சுமார் 300 ஆண்டுகள் வாழ்ந்த பின், 1312ல் விஜயநகர பேரரசர் கிருஷ்ண தேவராயர் அழைப்பை ஏற்று ஆந்திரத்தில் குடியேறினர். இதன் ஞாபகார்த்தமாக காலக்கணிப்பில் சவுராஷ்ட்ர விஜயாப்தம் 705 என குறிப்பிடப்படுகிறது.
தமிழக பிரவேசம்: தஞ்சையாண்ட மராட்டிய மன்னர், மதுரையாண்ட நாயக்க மன்னர், ராமநாதபுரத்தை ஆண்ட சேதுபதி மன்னர் சவுராஷ்டிரர்கள் உற்பத்தி செய்யும் பட்டாடைகளும், வேதவிற்பன்னர்கள், ஜோதிட, மாந்திரீக, சங்கீத, மற்போர், வைத்தியர்களின் திறமைகளும் கவர்ந்தன. ஆகவே இம்மன்னர்களின் வேண்டுகோளுக்கிணங்க தமிழகத்தில் குடியேறினர்.
பரமக்குடியில் குடியேற்றம்: ராமேஸ்வர யாத்திரையின் போது சில குடும்பத்தினர் பிரம்புக்காடுகள் கொண்ட வைகை நதிக்கரையில் ஒரு பெண்மணியின் பிரசவ நிமித்தம் தங்கியிருக்கையில் பரமக்குடி வைகை நீர் சாயத்தொழிலுக்கு உகந்ததாக இருந்ததால் அங்கேயே தங்கினர். பரமக்குடி சுந்தரராஜப் பெருமாள் (அழகர்) கோயில் வரலாறு: சுமார் 450 வருடங்களுக்கு முன் ‘கோபால மடம்’ என்ற சிறு பஜனை மடத்தை நிர்வகித்து தரிசனம் செய்து வந்தனர். ஒரு நாள் கனவில் மடத்தில் பூஜை செய்து வரும் அர்ச்சகரின் கனவில் பகவான் தோன்றி தான் வைகையில் புதைந்து கிடப்பதாக தெரிவித்தார். வழக்கம் போல் வைகை ஆற்றில் குளிப்பதற்கு ஓடுகால் தோண்டும் போது சங்கு சக்கரதாரியாக ஸ்ரீதேவி, பூதேவி தாயாருடன் அழகான கற்சிலை கிடைத்தது.
பின்னர் பெருமாளை கோபால மடத்தில் எழுந்தருள செய்து திருப்பணிகள் பல நடத்தி கி.பி.1900 ம் ஆண்டு ராஜகோபுரத்துடன் விளங்கும் பெருமாள் கோயிலை உருவாக்கினர். மதுரை அழகர் கோவிலில் நடைபெறும் அனைத்து விதமான விசேஷங்களும் நாள் தவறாமல் அன்று முதல் நடைபெற்று வருகின்றன. ஜாதி, சமயம் கடந்து வெளியூர்களில் இருந்தும், சுற்றுப்புற கிராமங்களில் இருந்தும் மக்கள் கூடி அவரவர் சொந்த விழா போல் கொண்டாடி வருவது போன்ற சுந்தரராஜப் பெருமாளின் பெருமையை கூறிக் கொண்டே செல்லலாம்.
ஆகமம் மற்றும் கோயில் அமைப்பு: இத்திருக்கோயில் ஆகம முறைப்படி கட்டப்பட்டு பூஜைகளும் நடந்து வருகின்றது. கோயிலின் அமைப்பானது, சுந்தரராஜப் பெருமாள் கர்ப்பகிரகம், அர்த்த மண்டபம், திருமாளிகை பிரகாரம் கருடமண்டபம், அணிவெட்டு மண்டபம், பலி பீடம், துவஜஸ்தம்பம், திருக்கல்யாண மண்டபமும், கல்யாண சவுந்தரவல்லி தாயார் கர்ப்பகிரகம், அர்த்த மண்டபம், மஹா மண்டபம், சோபன மண்டபமும், ஸ்ரீஆண்டாள் கர்ப்பகிரகம், அர்த்த மண்டபம், மஹாமண்டபம் ஆகியவைகளுடன் உயர்ந்த ராஜ கோபுரத்துடன் வடக்கு முகமாக அமைந்துள்ளது. வெளியில் காவல் தெய்வம் கருப்பண்ண சுவாமி கோயில் மிக அழகாக அமைந்துள்ளது.
மூலவர் பரமஸ்வாமி, உற்சவர் சுந்தரராஜப் பெருமாள், கல்யாணசவுந்தரவல்லி தாயார், ஸ்ரீ ஆண்டாள், கிருஷ்ணர், விஸ்வக்ஸேனர், சக்கரத்தாழ்வார், லெஷ்மி நரசிம்மர், ஆஞ்சநேயர், கருடாழ்வார், லெட்சுமி ஹயக்ரீவர், தன்வந்திரி, நவக்கிரகம், ஆழ்வார்கள், நடனகோபால நாயகி சுவாமி, தனிசன்னதிகளில் காட்சி தருகின்றனர். இத்திருக்கோயில் சவுராஷ்ட்ர பிராமண மகாஜனங்களால் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. இவர்கள் மூலம் 5 பேர் கொண்ட டிரஸ்டிகள் குழுதேர்ந்தெடுக்கப்பட்டு சிறந்த நிர்வாகத்தின் கீழ் உற்சவங்கள் நடைபெறுகின்றன.