சென்னிமலை: சென்னிமலை அடுத்து, முருங்கத்தொழுவில் உள்ள, பிரம்மலிங்கேஸ்வரர் கோவிலில் மழை வேண்டி சிறப்பு யாக வழிபாடு நடந்தது. மகா கணபதி ஹோமத்துடன் நிகழ்ச்சிகள் தொடங்கின. யாக சாலை அமைக்கப்பட்டு, அமிர்தலிங்கம் குருக்கள் தலைமையில் யாக பூஜைகள் நடந்தன. தொடர்ந்து மழை வேண்டியும், உலக நன்மைக்காகவும் கலச பூஜை, வருண பூஜை, வருண யாகம் மற்றும் கூட்டு வழிபாடு நடந்தது. கோவில் முன் உள்ள நந்தி சிலையை சுற்றி, தண்ணீர் தொட்டி கட்டப்பட்டு அதில் தண்ணீர் நிரப்பப்பட்டது. தண்ணீருக்குள் இருந்த நந்தி சிலைக்கு, ஆராதனை செய்யப்பட்டது. மேலும் பிரதோஷ தினமான நேற்று நந்தி பெருமாள் மற்றும் சிவபெருமானுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. அப்போது, பக்தர்கள் சிவபெருமானை போற்றும் வகையில் திருமுறை பாடல்கள் பாடினர்.