தொண்டி: மக்களுக்கும் சகல ஜீவராசிகளுக்கும் காவல் தெய்வமாக விளங்குபவர் கருப்புசாமி. பெரும்பாலான கோயில்களில் குதிரையில் அரிவாளுடன் அமர்ந்து காட்சி தருவார். கம்பீர உருவம், தலைபாகை, இடையில் கச்சை,மிரட்டும் விழிகள், முறுக்கும் மீசையுடன் காட்சியளிப்பார். கருப்பணசாமியை கண்கண்ட தெய்வமாக. தொண்டி அருகே உள்ள நம்புதாளை கிராம மக்கள் வழிபட்டு வருகின்றனர். இக் கிராம மக்களை காக்கும் தெய்வமாக உள்ள கருப்பருக்கு, இக் கிராமத்தை சேர்ந்த இளைஞர்கள் 18 அடி நீள அரிவாளை நேர்த்திக்கடனாக வழங்கியுள்ளனர். பழமைவாய்ந்த இக் கோயில் குறித்து கிராம மக்கள் கூறுகையில்- பண்டைய காலத்தில் நள்ளிரவில் கிராமங்களில் உள்ள தெருக்களில் காலில் சலங்கை சத்தம் கேட்குமாம். அப்போது கருப்பர் காவலுக்காக செல்கிறார் என்று பேசிக்கொள்வார்களாம். ஆண்டுதோறும் சித்ராபவுர்ணமி அன்று திருவிழா நடைபெறும். சிறுவர்கள் முதல் பெரியோர் வரை பூக்குழி இறங்குவார்கள். 18 கிராம மக்கள் குலதெய்வமாகவும் வழிபட்டு வருகிறார்கள், என்றனர்.