கண்களுக்கு விருந்து... காதுகளுக்கு இதம்: அழகு மிளிரும் சிவன்கோயில் தெப்பம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
24ஜூன் 2017 12:06
சிவகாசி: ஊருக்கு அழகு சேர்ப்பது கோயில், கோயிலுக்கு அழகு சேர்ப்பது தீர்த்தம். புண்ணியம் செய்தவருக்கு பூ உண்டு, நீர் உண்டு என்ற பழமொழிக்கு ஏற்ப சிவகாசி மக்கள் இறைவனை தரிசிக்க பல நுாறு ஆண்டுகளுக்கு முன்பு உருவானது சிவகாசி விஸ்வநாதசாமி - விசாலாட்சி அம்மன் எனும் சிவன் கோயில். இந்த கோயிலில் முன் பகுதியில் உள்ள சிவகங்கை தெப்பம் 35 அடி ஆழ கிணறாகவும், இதை சுற்றி சிறு தெப்பம் உருவாகி இருந்தது. காலமாற்றத்தில் கோயிலுக்கு வெளியே உள்ள ரோடு மேடாகியும் தெப்பம் தாழ்வாக மாறியதால் தெப்பம் சில காலம் மாசுபடும் நிலை உரு வானது. கோயிலின் கழிவு நீர் பக்தர்கள் முயற்சியில் தெப்பத்திற்குள் சேராமல் குழாய் மூலம் வெளியேற்றப்பட்டது. சிவகாசி சிவனடியார் அறநெறி கழகம் மற்றும் பொது மக்கள் பங்களிப்பில் கோயில் தெப்பம் சீரமைக்கும் பணி கடந்த சில ஆண்டுகளுக்கு முன் முடிந்தது. இதில் கிணறு துார்வாரப்பட்டு, தெப்பமும் ஆழப்படுத்தப்பட்டு மழைநீர் தெப்பத்திற்குள் சேகரமாகும் வகையில் வடிவமைத்தனர். அழகிய வேலை பாட்டுடன் தெப்பத்திற்குள் நீராழி மண்டபம் அமைத்துள்ளனர். மழை பொய்க்கும் காலங்களில் நந்தியை குளிர வைக்கும் வகையில் கோயிலில் தொட்டி கட்டி, நந்தியை நீரால் மூழ்க வைத்து மழைப்பதிகம் பாடினால் மழை வளம்,தொழில் வளம் பெருகும் என்பது ஐதீகம். இதை கருத்தில் கொண்டு தெப்பத்திற்குள் நீராழி மண்டபம் அமைத்துள்ளனர். தெப்பத்திற்கு நடுவே நந்தி எழுந்தருளி காட்சியளிக்கிறார்.
தெப்பத்தின் கன்னி மூலையில் தீர்த்தவாரி மண்டபம் அழகாக அமைத்துள்ளனர். இதில் சுவாமி பிரமோற்ஸவ விழா நாட்களில் தீர்த்தவாரி உற்சவம் நடைபெறும்போது பக்தர்களுக்கு கண்கொள்ளா காட்சியாக அமையும். விசாலாட்சி அம்பாள் சன்னதி முகப்பில் சுதைவேலைப்பாடுடன் பஞ்ச மூர்த்திகள் எழுந்தருளல் பெரும் சிறப்பாக உள்ளது. அழகு மிளிரும் கோயில் தெப்பத்தின் அழகை பக்தர்கள் கண்டு ரசிக்கும் கையில் சுற்றி இருக்கைகள், அலங்கார விளக்குகள் அமைத்துள்ளனர். காலை, மாலையில் தெப்பத்தின் அழகை ரசிக்கவும், ஐந்தெழுத்து மந்திரம், தேவாரம், திருவாசக பாடல்கள் செவிகளுக்கு இனிமையாக ஒலிக்கும் வகையில் ஏற்பாடு செய்துள்ளனர். அழகு மிளிரும் சிவகாசி சிவன்கோயில் தெப்பத்தின் அழகை நீங்களும் கண்டு ரசிக்க கோயிலுக்கு விசிட் செய்யுங்கள்.