பதிவு செய்த நாள்
27
ஜூன்
2017
12:06
ஊட்டி : ஊட்டி அருகே கடநாடு கிராமத்தில் நடந்த அறுவடை திருவிழாவுக்கு முன்பு நடக்கும் பண்டிகையில், ’தொதநாடு சீமையை’ சேர்ந்த, 33 கிராமத்தை சேர்ந்த படுகரின மக்கள் பங்கேற்றனர். நீலகிரியில் வாழும் படுகரின மக்கள், தங்கள் குலதெய்வ பண்டிகையான தெவ்வ பண்டிகை (அறுவடை திருவிழா) கிராமங்கள் தோறும் கொண்டாடி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, தொதநாடு சீமையில் உள்ள ஊரான கடநாட்டில் அடுத்த மாதம் அறுவடை திருவிழா நடக்கவுள்ளது. இதற்கு முன்பு, வருண பகவானுக்கு செய்யப்படும் ’ஹள்ளபருவா’ எனப்படும் சிறப்பு பூஜை கடநாடு கிராமத்தில் நடந்தது. இதில், 33 கிராமத்தை சேர்ந்தவர்கள் பங்கேற்றனர். இதனை முன்னிட்டு, நேற்று காலை கடநாடு கிராமத்திலுள்ள குலதெய்வமான ’ஹிரியோடைய’ கோவிலில் பிரார்த்தனை செய்து, பின்னர் அருகேயுள்ள ஆற்றில் பால் ஊற்றி கங்கா தேவிக்கு பூஜை செய்தனர் பின்னர், அங்குள்ள திறந்தவெளியில் பால் சாதம் செய்து, அனைவரும் பிரசாதமாக உட்கொண்டனர். இதில், திரளான கிராம மக்களும் பங்கேற்றனர். தொதநாடு சீமை தலைவர் முருகன் , பூஜாரி ராஜாரத்தினம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.