பதிவு செய்த நாள்
29
ஜூன்
2017
12:06
புதுச்சேரி: குண்டுதாங்கி ஐயனாரப்பன் கோவிலில், 80 சுவாமி சிலைகள் பிரதிஷ்டை செய்வதற்கான கரிக்கோலம் நேற்று நடந்தது. புதுச்சேரி, தட்டாஞ்சாவடி குண்டுதாங்கி ஐயனாரப்பன் உடனுறை பூரணி-பொற்கலை கோவிலில், சுந்தர விநாயகர், முத்துமாரியம்மன், கெங்கையம்மன் சன்னதிகள் அமைந்துள்ளன. இக் கோவிலில் திருப்பணிகள் முடிந்து, நாளை (30ம் தேதி) கும்பாபிஷேகம் நடக்கிறது. அதையொட்டி, நேற்று கணபதி ஹோமத்துடன் விழா துவங்கியது. தொடர்ந்து, கோ பூஜை, அஸ்வ பூஜை, சுமங்கலி தம்பதி பூஜை ஆகியவை நடந்தன.
கரிக்கோலம்: பகல் 12:00 மணியளவில், கோவிலில் பிரதிஷ்டை செய்யப்பட உள்ள புதிய சுவாமி சிலைகள், தட்டாஞ்சாவடி சுப்பையா நகரின் முக்கிய வீதிகளில் கரிக்கோலம் வீதியுலா நடந்தது. மொத்தம் 80 வெண்கல, கருங்கல் சுவாமி சிலைகளுடன், ரிஷப, மோஷிச, அன்னப்பட்சி வாகனங்களும் கரிகோலம் எடுத்துச் செல்லப்பட்டது. பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர்.
நாளை கும்பாபிஷேகம்: இன்று (29ம் தேதி) காலை 8.30 மணிக்கு இரண்டாம் கால யாக பூஜை, மாலை 5.50 மணிக்கு மூன்றாம் கால யாக பூஜை நடக்கிறது. நாளை (30ம் தேதி) காலை 8.30 மணிக்கு கடம் புறப்பாடு, ௯.00 மணிக்கு சுந்தர விநாயகர் கோவில், 9.20 மணிக்கு முத்துமாரியம்மன், கெங்கையம்மன் கோவில், 10:00 மணிக்கு குண்டு தாங்கி ஐயனாரப்பன் கோவில் கலசத்தில் புனித ஊர் ஊற்றி, கும்பாபிஷேகம் நடக்கிறது. விழாவில், முதல்வர் நாராயணசாமி, எதிர்க்கட்சித் தலைவர் ரங்கசாமி, அசோக்ஆனந்த் எம்.எல்.ஏ., இந்து அறநிலைய துறை செயலர் அருண் தேசாய், ஆணையர் தில்லைவேல் உள்ளிட்ட பலர் பங்கேற்கின்றனர். ஏற்பாடுகளை, ஊர் பிரமுகர்கள், திருப்பணி குழு, விழா குழுவினர் செய்துள்ளனர்.