பதிவு செய்த நாள்
29
ஜூன்
2017
12:06
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில், கோட்டைமேடு பகுதியில் உள்ள கட்டபொம்மன் கோட்டை சிதைந்து வருகிறது. தொல்லியல் துறை அதிகாரிகள் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கி.பி., 1601 முதல் சேது நாட்டை ஆளத்துவங்கிய சேதுபதி மன்னர்களின் முதல் தலைநகராக சத்திரக்குடி அருகில் உள்ள போகலுார் இருந்துள்ளது. தொடர்ந்து ஐந்து சேதுபதி மன்னர்களுக்குப்பிறகு வந்த ரெகுநாத கிழவன் சேதுபதியின் காலத்தில் தலைநகர் ராமநாதபுரத்திற்கு மாற்றம் செய்யப்பட்டது.
கி.பி.1713 முதல் 1725 வரை ஆட்சி செய்த முத்துவிஜய ரகுநாத சேதுபதி என்ற உடையத்தேவர் கமுதி, பாம்பன், ஆர்.எஸ்.மங்கலம், செங்கமடை ஆகிய இடங்களில் மூன்று புதிய கோட்டைகளை கட்டியுள்ளார். பிரான்ஸ் நாட்டு பொறியியல் வல்லுனர்களின் உதவியுடன், கமுதியில் வட்ட வடிவிலும், செங்கமடை கோட்டை அறுங்கோண வடிவிலும், கட்டப்பட்டுள்ளன. பாம்பன் கோட்டை ஆங்கிலேயர்களால் அழிக்கப்பட்டது போக எஞ்சியிருந்ததும் 1964 ல் வீசிய புயலின் போது முற்றிலும் அழிந்துவிட்டது. இதன் அமைப்பு குறித்து அறியமுடியவில்லை. கமுதிக்கோட்டை: கமுதி கோட்டை மூன்று சுற்று மதில்களுடன் காணப்படுகிறது. குண்டாற்றின் கரையில் மேட்டுப்பகுதியில் அமைந்துள்ளது. குண்டாறு பகுதியில் இருந்து பாறைக்கற்கள் எடுக்கப்பட்டு கோட்டை கட்டப்பயன்படுத்தியுள்ளனர். வெட்டி எடுக்கப்பட்ட பெரிய பாறைகள் இன்றும் உள்ளது.
இரும்பு: இரும்பு மூலப்பொருட்கள் கோட்டையை சுற்றி உள்ள பகுதிகளில் கிடைப்பதன் மூலம் பழங்காலம் முதல் இங்கு இரும்பு உருக்காலை இருந்திருக்க வாய்ப்பு உள்ளது. வீரர்கள் நின்று கண்காணிக்கும் வகையில் ஏழு கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இப்பகுதியில் நாட்டு வீழி, துரட்டி ஆதண்டை, போன்ற மூலிகைச்செடிகள் காணப்படுகின்றன.
கற்கோட்டை: செங்கலால் கட்டப்பட்ட பின் அதன் உள், வெளிப்புறங்களில் பல விதமான பாறைகளை பொருத்தி கற்கோட்டை போன்ற அமைப்பினை பெற்றுள்ளது. கோட்டை கட்டுவதற்கான செங்கற்களை அப்பகுதியில் தயாரித்து சுட்டு பயன்படுத்தியுள்ளனர். பாறைகளை வெட்டி எடுத்து பொருத்தப்பட்டதால், பாறை எடுக்கப்பட்ட பகுதி அகழி போன்ற தோற்றத்தில் உள்ளது . கோட்டையின் உள் பகுதியில் கோட்டைமுனீஸ்வரர் கோயில் உள்ளது. இதன் ஒரு பகுதி திருமண மண்டபமாக செயல்பட்டு வருகிறது. இதன் வெளிப்பகுதியில் சக்கம்மா, வீரபத்திர சுவாமி கோயில்கள் உள்ளன.
சிதைகிறது: இது சிறிய கோட்டையாக இருந்தாலும் இரண்டடுக்கு பாதுகாப்பு இருந்துள்ளது. கோட்டையின் மேற்குப்பகுதியில் மாறவர்மன் சுந்தரபாண்டிய மன்னரால் கட்டப்பட்ட மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் உள்ளது.
கி.பி., 1877 ல் குண்டாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் கோட்டையின் பல பகுதிகள் சேதமடைந்தன. வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட கற் பாறைகள் குண்டாறு மதகு அணைப்பகுதியில் சிதறிக்கிடக்கின்றன. கற்கள் பெயர்த்து ஆங்கிலேயர்கள் குண்டாற்றில் பாலம் கட்ட பயன்படுத்தியதாக தகவல்கள் உள்ளன. கற்கள் பெயர்ந்து போனதால், தற்போது செங்கல் கோட்டையாக காட்சியளிக்கிறது.
இடிப்பு: சேது நாட்டை ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனி படையினர் இக்கோட்டையை கைப்பற்றினர். மீண்டும் மருது சகோதரர்கள் இந்த கோட்டையை கைப்பற்றியுள்ளனர். மீண்டும் கிழக்கிந்திய கம்பெனியினர் கைப்பற்றி இந்த கோட்டையை அழித்துள்ளனர். அவர்கள் விட்டு சென்ற மீதிதான் தற்போது கோட்டையாக காட்சியளிக்கிறது.
கட்ட பொம்மன் கோட்டை: கி.பி., 1798 ல் செப்., 9 ல் கட்ட பொம்மன் ஜாக்சன் துரையை சந்திக்க ராமநாதபுரம் வந்த போது இக் கோட்டையில் தங்கி சென்றதால், இதனை கட்ட பொம்மன் கோட்டை என்று அழைக்கின்றனர். இந்தப்பகுதி கோட்டை மேடு, என அழைக்கப்பட்டு வருகிறது. தொல்லியல் பாதுகாப்பு துறையின் கட்டுப்பாட்டில் கோட்டை இருந்தாலும் முறையான பராமரிப்பு செய்யாததால் கம்பீரமான இந்த கோட்டை நாளுக்கு நாள் சிதைந்து வருகிறது. வரும் தலைமுறைகளுக்கு நமது முன்னோர்களின் கோட்டை அமைப்பினையும், அதன் பிரம்மாண்டத்தையும் எடுத்து சொல்ல இருக்கும் கோட்டைகள் படிப்படியாக அழிந்து வருவதை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.