பதிவு செய்த நாள்
31
ஜூலை
2017
12:07
வடமதுரை: வடமதுரையில் சவுந்தரராஜப் பெருமாள் கோயில் ஆடித்திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. மண்டபடிதாரர் சரவணமூர்த்தி மற்றும் உடையாம்பட்டி கிராம மக்கள் வடமதுரையின் நான்கு ரத வீதிகள் வழியே ஊர்வலம் வந்து கொடியை கோயிலுக்குள் கொண்டு வந்தனர். கொடிமரம் முன்பாக ஸ்ரீதேவி, பூமாதேவியுடன் சவுந்தரராஜப் பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருள சிறப்பு பூஜைகள் முடிந்து காலை 11:30 மணியளவில் கொடியேற்றம் நடந்தது. 13 நாட்கள் நடைபெறும் இத்திருவிழாவில் நாள்தோறும் இரவு அனுமார், அன்ன, சிம்ம, கருட, சேஷ, யானை, புஷ்ப, குதிரை, ஊஞ்சல் கருட, விடையாத்தி குதிரை என பல வாகனங்களில் சுவாமி புறப்பாடும், மண்டகபடிதாரர் சார்பில் பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் நடைபெறும். முக்கிய நிகழ்ச்சிகளாக ஆக.5ல் திருக்கல்யாணமும், ஆக.7ல் தேரோட்டமும், ஆக.9ல் வசந்தம் முத்துபல்லக்கு வைபவமும் நடக்கிறது. விழா ஏற்பாட்டினை செயல் அலுவலர் மகேந்திரபூபதி, தக்கார் வேல்முருகன் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.