ராமநாதபுரம்: ராமநாதபுரம் புளிக்காரதெருமுத்துமாரியம்மன் கோயில் ஆடித்திருவிழாவில் அம்மன் கரகம், முளைப்பாரி எடுத்து ஊர்வலமாகவந்தவர்களை, சின்னக்கடைத்தெருவில் பொன்னாடை போர்த்தி முஸ்லிம்கள் வரவேற்றனர். இந்த நிகழ்ச்சி மத நல்லிணக்கத்திற்கான சான்றாக அமைந்தது. ராமநாதபுரம் புளிக்காரத்தெரு முத்துமாரியம்மன் கோயிலில் பொங்கல் விழா நடந்து வருகிறது. நேற்று காலை அம்மன் கரகம் வீதியுலா சென்றது. பின்பு கோயிலில் பெண்கள் பொங்கலிட்டனர். மாவிளக்கு எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். நேற்று மாலை 4:00 மணிக்கு அம்மன் கரகம், முளைப்பாரி ஊர்வலம் நடந்தது. இதில் 500 க்கும் மேற்பட்ட பெண்கள் முளைப்பாரி எடுத்து வந்தனர். சின்னக்கடை தெரு வழியாக அம்மன் கரகம் வந்தது. முஸ்லிம் பள்ளிவாசல் அருகே வாலிபர் சங்கத்தின் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. அம்மன் கரகம் சுமந்து வந்தவருக்கு முஸ்லிம் சங்க நிர்வாகி முகமது நிஷார் பொன்னாடை போர்த்தி வரவேற்றார்.சைரோஸ், நைனார் உட்பட ஜமாத்தினர் பங்கு பெற்றனர்.
முகமது நிஷார் தெரிவித்ததாவது: இந்து, முஸ்லிம் மக்கள் மத நல்லிணக்கத்தோடு, சகோதரர்களாக பாவித்து பழக வேண்டும். பல ஆண்டுகளாக சின்னக்கடை பகுதியில் முத்துமாரியம்மன் கோயில் முளைப்பாரி ஊர்வலத்திற்கு வரவேற்பு கொடுத்து வருகிறோம். எங்களது நல்லிணக்கப்பணிகள் தொடரும், என்றார். இந்துக்கள் தரப்பில் அங்குசாமி தெரிவித்ததாவது: இரு தரப்பு மக்களும் சகோதரர்களாக பழகி வருகிறோம். அம்மன் முளைப்பாரி ஊர்வலத்திற்கு முஸ்லிம் மக்கள் வரவேற்பளித்தது, மகிழ்ச்சியாக உள்ளது.