பதிவு செய்த நாள்
17
ஆக
2017
01:08
ஓசூர்: தேன்கனிக்கோட்டை அருகே, புலி சின்னத்துடன் கூடிய சித்திர மேழி வணிகக்குழு கல்வெட்டை, அறம் வரலாற்று ஆய்வு மைய குழுவினர் கண்டுபிடித்துள்ளனர். இதுகுறித்து, குழு தலைவர் கிருஷ்ணன் கூறியதாவது: கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அடுத்த வானமங்கலம் ஆஞ்ச நேயர் கோவில் அருகே கள ஆய்வில் ஈடுபட்டிருந்த போது, சோழர் காலத்தை சேர்ந்த, புலி சின்னத்துடன் கூடிய வணிகக் குழு கல்வெட்டானது உடைந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த இடத்தில், பெருமாள் கோவிலில் வைக்கப்படும் கருடகம்பம் ஒன்று கீழே விழுந்து கிடந்துள்ளது. அதை துாக்கி நிறுத்த முயற்சி செய்த போது, அதன் அடியில், இரு துண்டுகளாக உடைந்த நிலையில் பாறை ஒன்று இருப்பதை கிராம மக்கள் பார்த்துள்ளனர்.
இந்த இரு பாறை துண்டுகளும், சோழர் காலத்தை சேர்ந்த வணிகக்குழு கல்வெட்டு ஆகும். இரண்டாக உடைந்த கல்வெட்டின் மேல் பகுதி மட்டுமே எங்களுக்கு கிடைத்தது. கல்வெட்டின் மேல் பகுதியில் சோழர்களின் புலி சின்னம், சித்திர மேழி என்ற ஏர் கலப்பை, ஒய்சாளர்களின் பறவை சின்னம், சூரியன், சந்திரன் போன்ற சின்னங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில், சோழர்களின் புலி சின்னம் பொறிக்கப்பட்ட வணிகக் குழு கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டது இதுவே முதல் முறையாகும். சித்திர மேழி என்பது, 11 ம் நுாற்றாண்டில், சோழர் காலத்தில் விவசாயிகளை ஒருங்கிணைத்து உருவாக்கப்பட்ட வணிகக் குழுவாகும். உடைந்த நிலையில் நாங்கள் கண்டுபிடித்துள்ள இந்த கல்வெட்டில், ஏழு வரிகள் உள்ளன. இதில், ஒய்சாளர்களின் கடைசி அரசன் வீர வள்ளால தேவர் என்ற பெயர் மட்டுமே முழுமையாக இருக்கிறது. மேலும், பவ வருஷத்து, வைகாசி, முரசு நாட்டு சோழ நாட்டினர், ராமனா தேவர் போன்ற வார்த்தைகளை மட்டும் ஓரளவு படிக்க முடிகிறது. இக்கல்வெட்டு மூலம், தொண்டை மண்டலத்தை சேர்ந்த வணிகர்களுக்கும், நிகரிழி சோழ மண்டலமான முரசு நாட்டில் (ஓசூரின் பழைய பெயர்) இருக்கும் வணிகக் குழுக்களுக்கும் இடையே வாணிபம் நடைபெற்றிருக்க வேண்டும் என்பதை காட்டுகிறது. இக்கல்வெட்டு, ஓய்சாள அரசர் வீர வள்ளாலன் காலத்தில் செதுக்கப்பட்டிருக்க வேண்டும். அதற்கு அடையாளமாக அவர்களின் சின்னமான பறவை சின்னம் இடது புறத்தில் செதுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.