பதிவு செய்த நாள்
02
செப்
2017
01:09
உலக மக்களை நேர்வழியில் கொண்டு செல்லும் முயற்சிகளை மேற்கொண்டு, அதில் வெற்றி பெற்ற நபிமார்கள் வரிசையில், இப்ராஹிம் நபியின் வாழ்க்கை வரலாறு முக்கியமானதாய் விளங்குகிறது. அவருக்கு முன் வாழ்ந்த நுாஹ் நபி, ஹுது நபி, சாலிஹ் நபி ஆகிய நபிமார்கள் வரிசையில் இவரும் வருகிறார். இப்ராஹிம் நபி செய்த தியாகத்தை நினைவுக்கூர்ந்து தான், இன்றைய நாளை, தியாகத் திருநாள் என்றும், பக்ரீத் என்றும், உலகம் முழுக்க இருக்கும் முஸ்லிம்கள் அனைவரும் கடை பிடிக்கின்றனர். இதை ஒரு பண்டிகையாக கொண்டாடுகின்றனர்.
இஸ்லாமிய சரித்திரம் ஆண்டு துவக்கமான முஹர்ரம் மாதமும், இறுதி மாதமான துல்ஹஜ் மாதமும் மாபெரும் தியாகங்களை உள்ளடக்கிய மாதங்கள். இப்ராஹிம் நபியின் காலகட்டத்தில் மக்கள் சூரியன், சந்திரன், நட்சத்திரங்களை கடவுள்களாக எண்ணி, வணங்கி வந்தனர். இப்ராஹிம் நபிக்கு, சிறு வயதிலிருந்தே இதில் ஈடுபாடு இருந்ததில்லை. அதனால் அவர், ஓரிறைக் கொள்கைகளை பற்றி, மக்களிடம் போதித்து வந்தார். இறைவனின் வழிபாட்டுதலை பின்பற்றி வருவதால் ஏற்படுகின்ற பலன்களை பற்றியும், அதற்கு மாற்றாக செயல்படுவதால் ஏற்படும் பேரழிவுகளை பற்றியும், மக்களிடம் தொடர்ந்து எடுத்துஉரைத்தார். இரவில் மின்னும் நட்சத்திரங்களை கடவுள்களாக வழிபடுபவர்களிடம், இவற்றை நாம் இறைவனாக எடுத்துக் கொண்டால், இவை இரவில் தோன்றி, பகலில் மறைந்து விடுகிறதே... இவற்றை நாம் எவ்வாறு இறைவனாக ஏற்றுக் கொள்வது? என்று கேட்டார் - அல்குர் ஆன் 06:76
நிலவை கடவுளாக வழிபடுபவர்களிடம், இதை நான் இறைவனாக ஏற்றுக் கொள்வதாக இருந்தால், அதுவும் இரவில் ஒளியை தந்து, பகலில் மறையக் கூடியதாக இருக்கிறதே... எனக்கு இறைவன் நேர்வழி காட்டவில்லை என்றால், நானும் வழி தவறிச் செல்பவரில் ஒருவனாக இருந்து இருப்பேன் என்றார் - அல்குர் ஆன் - 6 : 77.
மிகப் பிரகாசமாக சுடர் விட்டு ஒளிவீசும் பிரமாண்டமான சூரியனை, கடவுளாக வழிபடும் மக்களை பார்த்து, இதை நான் இறைவனாக ஏற்று கொள்வதாக இருந்தால், அது பகலில் தோன்றி இரவில் மறைந்து விடுகிறதே... இவ்வாறு பகலில் தோன்றி இரவில் மறைவனவற்றையா, நான் இறைவனாக ஏற்றுக் கொள்ள முடியும்? இறைவனின் படைப்புகளை இறைவனாக கருதுவதை விட்டு விலகி நிற்கிறேன். இவற்றை எல்லாம் படைத்தது, அல்லாஹ் தான். இவ்வாறு படைத்து, பரிபாலிக்கிற, அந்த ஏக இறைவனாகிய, அல்லாஹாவின் வழிகாட்டுதலுக்கு மட்டும், அடிபணிந்து வாழ விரும்புகிறேன். அதனால் ஏற்படும் பலன்களை நான் உங்களுக்கு எடுத்துரைக்கிறேன் என்று, தம் சமுதாயத்திற்கு பல முறை போதித்து வந்தார். (அல்குர் ஆன் - 6:78, 79)
இப்ராஷிம் நபிக்கு, சாரா மற்றும் ஹாஜிரா என, இரண்டு மனைவியர் இருந்தனர். அவருக்கு நீண்ட நாள் வரை குழந்தை பாக்கியம் இல்லாமல் இருந்தது. அவருக்கு, 85 வயது ஆன போது, ஹாஜிரா மூலம் ஒரு பிள்ளை பிறந்தது. அவர் பெயர் இஸ்லாமியில் நபி. சில ஆண்டுகள் கழித்து, சாரா மூலமாக ஒரு பிள்ளை பிறந்தது. அவர் பெயர் இஸ்ஹாக் நபி. ஒரு முறை, இப்ராஹிம் நபியின் கனவில், இறைவன் தோன்றி, உம்முடைய மகன், இஸ்மாயிலை, என் பெயரால் தியாகம் செய் என்று கட்டளையிட்டான். இறைத்துாதருக்கு வரும் கனவுகள் வெறும் கனவுகள் அல்ல. அவை கடவுளின் கடிதங்கள். இறைவனின் கட்டளையை நிறைவேற்ற, இப்ராஹிம் நபி, தன் கனவைப் பற்றி, மகன் இஸ்மாயிலிடம் கூறுகிறார்.அதற்கு அந்த பிள்ளை, தங்களுக்கு அல்லாஹ் என்ன கட்டளையிட்டாரோ, அதை நிறைவேற்றுங்கள். நான் நிச்சயமாக பொறுமையோடு இருப்பேன் என, கூறினார். என்ன ஒரு நம்பிக்கை பாருங்கள்!
பின், இப்ராஹிம் நபி, தன் மகன் இஸ்மாயிலை அழைத்துக் கொண்டு, மினா எனும் மலையடிவாரத்திற்கு சென்றார். பிள்ளைப் பாசம் தடுக்காமல் இருக்க, தன் கண்களை, துணியால் கட்டி, மகன் கழுத்தில் கூரிய கத்தியை வைத்து, அல்லாஹ் மிகப் பெரியவன் எனக் கூறியதும், மகன் இருந்த இடத்தில் ஒரு கொழுத்த ஆடும், மகன் விலகியிருந்த காட்சியையும் காண்கிறார். எல்லாப் புகழும் அல்லாஹவுக்கே... அனைத்தின் மீது ஆற்றல் கொண்டவன் அவனே... அவனை தவிர வணக்கத்துக்கு உரியவன் வேறில்லை. நீயே என் அதிபதி... என்று தன்னை சோதித்த இறைவனுக்கு, நன்றி செலுத்தினார்.இதன் நினைவாகவே, இறுதி நபி முஹம்மத். இந்நாளில் நீங்கள் அனைவரும் அந்த தியாகத்தை நினைவில் கொள்ள, உங்களில் வசதியுள்ளவர், ஓர் ஆட்டை குர்பானி கொடுத்து, அதன் கறியை ஏழைகளுக்க கொடுத்து கொண்டாடுங்கள்... என்று சொன்னார்.இப்ராஹிம் நபியுடைய வாழ்க்கை மட்டுமின்றி, ஆதம் நபி துவங்கி, முஹம்மத் நபி வரை, ஒவ்வொரு நபியுடைய வாழ்க்கையும், எல்லையற்ற தியாகத்தை கொண்டது. தாங்கள் பிறந்த மண்ணிலிருந்து, அவர்கள் வியர்வை, கண்ணீர் சிந்தி, தங்கள் குடும்பம், மனைவி, பிள்ளைகள், வியாபாரத்தைவிட மேலானதை, இறைவனின் சத்தியத்தை, நேர்வழியை மக்களுக்கு சேர்த்து, எல்லையற்ற தியாகங்களை செய்தனர். அந்த தன்னலமற்ற தியாகங்களை நினைவு கூரும் நாளாக, இன்றைய தியாகத் திருநாள் மலரட்டும். இறைவனுடைய படைப்பிலேயே, மிகச் சிறந்த படைப்பு மனிதன் தான். அவனால், படைக்கப்பட்ட இன்னொரு மனிதனை, நாம் பரிகாசம் செய்வது, இறைவனையே நாம் பரிகாசம் செய்வது போலாகும். நம் மனதில் மறைந்திருக்கும் கேடுகளை, ஆடுகளுடன் சேர்த்து, இந்த பக்ரீத்தில் தியாகம் செய்வோம்.
இந்த தியாகத் திருநாளில், எல்லாரும் இறைவனிடம் கையேந்துவோம். இவ்வுலகை படைத்து பரிபாலிப்பவனே... அளவற்ற அருள் பொழிபவனே... நிறைந்த அன்புடையோனே... தீர்ப்பு நாளின் அதிபதியே... உலக மக்கள் அனைவருக்கும் நேர்வழி காட்டுவாயாக... ஆமின்! அன்பு, பாசம். சகோதரத்துவம் ஓங்கச் செய்து, உலகமெங்கும் அமைதி, சமாதானம், மனித நேயம், மத நல்லிணக்கம் ஏற்படுத்த செய்வாயாக... ஆமின்! நன்றியும், கருணையும், நட்பும், உதவும் மனோபாவமும் நம் மனங்களில் சுரக்கச் செய்வாயாக... ஆமீன்!
சமிக்ஞை காட்டு!
உன்னிடமிருந்து
தொலைவில்
இருக்கிறேன்.
கூட்டத்தில்
தொலைந்து
நிற்கிறேன்.
எங்கும் இருப்பவனே...
என்
இயலாமையை
மன்னித்து விடு!
சூழலின்
சூழ்ச்சியில் சிக்கி
இருக்கிறேன்.
பூக்களை யாரோ
பறிக்கின்றனர்.
முட்களால்
என் வழியை மறிக்கின்றனர்.
எல்லாம் அறிந்த
உன் முன்
ஊமையாகிறேன்...
ஒரு
சமிக்ஞை காட்டு.
அது போதும் எனக்கு...!
- நைகார் முஹம்மத் உபைதுல்லா
நெஞ்சு நிமிர்கிறது!
உன் இல்லத்தில்
யாரும்
வலியவன், எளியவன்
கிடையாது.
எல்லாரும்
ஓர் அணியாக நிற்பது
கண்கூடு!
மனித உள்ளத்தில்
வேண்டுமென்றால்
பேதங்கள்
இருக்கலாம்.
அதை வேதங்கள் சொல்லவில்லை...
உன்னிடம் மட்டும்
தலை குனியும் போது
நெஞ்சு நிமிர்கிறது.
உன் ஆதரவு
இருந்தால்
நஞ்சு கூட
பஞ்சு ஆகிறது!
- முஹம்மத் அலி
ஒரு தாயின் கண்ணீர்: ம்ஜான் மாதத்தில், பெருநாளுக்கு முன்வரும், கடைசி, 10 இரவுகள் மிகவும் முக்கியமானவை. அதை போலவே தியாகத் திருநாளான பக்ரீத்துக்கு முன்வரும், 10 நாட்களும் மிகச் சிறந்த நாட்கள் ஆகும். இந்த நாட்களில் தொழுகை, ஜிக்கிர் செய்தல், குர் - ஆன் ஓதுதல், நோன்பு வைத்தல், ஏழைகளுக்கு உதவி செய்தல், இவற்றுடன் ஹஜ் செல்பவர்களுக்கு அந்த நன்மையும் கிடைக்கும்.
இஸ்லாமியர் காலண்டர்படி, ஆண்டின் கடைசி மாதம் ஜில்ஹஜ். இந்த மாதத்தின், முதல், 10 நாட்கள் சிறப்பு வாய்ந்தவை. அதன் ஒவ்வொரு நிமிடத்தையும், நாம் நற்செயலுக்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும். பக்ரீத் பண்டிகைக்கு முதல் நாள் ஆன, ஒன்பதாவது நாள் மிகவும் முக்கியமான நாள் ஆகும்.
அன்று நோன்பு வைப்பது சிறந்தது. அன்று தான், ஹாஜிகளான புனித பயணியர், அரபாத்தில் உள்ள, உயரமான குன்றில் திரண்டு, இறைவனை பிரார்த்திக்கின்றனர். இறைவனிடம் கையேந்தி அழுது, தொழுது பாவ மன்னிப்பு கேட்கின்றனர். தம்முடைய தேவை
களையும், எதிர்பார்ப்புகளையும் இறைவனிடம் சமர்ப்பிக்கின்றனர். இந்த நிகழ்வு தான், ஹஜ்ஜின் முக்கிய கட்டம் ஆகும்.
இந்த காலகட்டத்தில், நாம் அதிகமாக கண்ணீர் சிந்தி, இறைவனிடத்தில் பிரார்த்திக்க வேண்டும். அதன் பலன் எப்படி இருக்கும் என்பதை, வரலாற்றை திரும்பிப் பார்த்தால் தெரியும். இப்ராஹிம் நபி, அவர்களின் மனைவி ஹாஜிரா அம்மையார், தம் குழந்தை, இஸ்மாயிலுக்கு தாகம் தீர்க்க தண்ணீரை தேடி, பாலைவன பகுதியில் ஸபா - மர்வா என்கிற குன்றுகளுக்கிடையே ஓடினார்.
தன் பிள்ளை தாகத்தில் துடிக்கிறதே என்று, கண்ணீர் சிந்தினார். இறைவனின் கருணையால், அங்கே இஸ்மாயிலின் கால் அடியில், ஒரு நீர் ஊற்று உண்டானது. அது நிற்காமல், தண்ணீர் தொடர்ந்து பாய்ந்து வருவதை கண்ட ஹாஜிரா அம்மையார், அதைப்பார்த்து, ஸம்... ஸம்... அதாவது, நில்... நில்... என்றார்.
அந்த நீர் ஊற்று தான் ஸம்ஸம் கிணறாக திகழ்கிறது. உலகில் உள்ள, அனைவரும் ஸம்ஸம் நீரை, ஒருமிடறாவது குடித்திருப்பர். அதுதான், அந்த தாயின் கண்ணீரின் வலிமை. அது தண்ணீராக மாறி, உலகின் ஆன்ம தாகத்தை தீர்ப்பதுடன், பிரார்த்தனையின் வலிமையையும் நமக்கு உணர்த்துகிறது. ஆக, இந்த, 10 நாட்களில் மிக அதிகமாக பிரார்த்தனை செய்து நன்மையை பெறுவோம்.
உள்ளத்தின் ரகசியங்கள் அனைத்தையும், ஊடுருவி அறியும் வல்லமை பெற்ற இறைவனிடத்தில், மன துாய்மையைக் கொண்டு, எல்லா வழிபாடுகளும் அங்கீகரிக்கப்படும் என்பதற்கு, நபியே நீர் கூறும் நிச்சயமாக, என்னுடைய தொழுகையும், என்னுடைய தியாகமும், என் வாழ்வும், என் மரணமும், உலகத்தை படைத்து பரிபாலிக்கும் இறைவனுக்கே உரியவை எனும் திருக்குர் - ஆனின் வசனமே ஆதாரம்.
எந்தக் குர்பானியாவது, இறைவனின் திருப்பொருத்தத்திருக்காக மட்டுமே செய்யப்பட்டதோ, அதுவே அவனிடத்தில் அங்கீகரிக்கப்பட்டதாகவும், குர்பானி என்று கூற தகுதி உடையதாகவும் இருக்கும் என்பதையே, இந்த வசனம் நமக்கு தெளிவாக உணர்த்துகிறது. பக்ரீத் பெருநாள் தொழுகைக்கு பின், குர்பானி கொடுக்க வேண்டும். குர்பானி இறைச்சியை, மூன்று சமபங்காக பிரிக்க வேண்டும். அந்த மூன்றில் ஒரு பங்கை தனக்கும், இன்னொன்றை உறவினர்களுக்கும், மூன்றாவது பங்கை ஏழைகளுக்கும் பகிர்ந்து அளிக்க வேண்டும்.
குர்பானி, மூன்று தினங்களில் கொடுக்கலாம். அவை துல்ஹஜ் மாதம், 10, 11, 12ம் தேதிகளாகும். அதாவது, பக்ரீத் பண்டிகையின், முதல், இரண்டாம் மற்றும் மூன்றாம் நாளாகும். இப்ராஹிம் நபியின் தியாகத்தை நினைவு கூரும் விதமாக, நபிகள் நாயகமான ஸல், இந்நாளில், நீங்கள் அனைவரும், அந்த தியாகத்தை நினைவில் கொள்ள, உங்களில் வசதியுள்ளவர்கள், குர்பானி கொடுத்து, அதன் கறியை ஏழைகளுக்கு கொடுத்து கொண்டாடுங்கள் என்று கூறியுள்ளார். இஸ்லாமியர்களுக்கு, இரண்டு பெருநாட்கள். ஒன்று ஈதுல் அழ்ஹா. அடுத்தது ஈதுல் பித்ர். இந்த இரு பெருநாட்களையும் முக்கியமான, இரண்டு வணக்கங்களைத் தொடர்ந்து தான், அல்லாஹ் அருளியிருக்கின்றான். ரமழானுடைய நோன்பைத் தொடர்ந்து, ஈதுல் பித்ர் பெருநாளையும், ஹஜ் கடமையை அடுத்து, ஈதுல் அழ்ஹா எனும் தியாகத் திருநாளையும் கொண்டாடுகிறோம். ஈகைத்திருநாளைக் கூட, இறைவன் மிகப் பெரியவன் எனும் தக்பீரோடு ஆரம்பிக்கிறோம். தக்பீரோடு நிறைவு செய்கிறோம்.
இடையிலே மீண்டும் தொழுகையிலும், பல வணக்க வழிபாடுகளிலும் ஈடுபடுகிறோம். பெருநாளுக்காகக் குளிப்பது ஒரு முக்கியமான நபிவழி. நறுமணம் பூசிக் கொள்வதும், இருக்கின்ற ஆடைகளுள் அழகான ஆடைகளை அணிந்து கொள்வதும் பெருநாள் தினத்திலே நாம் கடைப்பிடிக்க வேண்டிய வழிகாட்டுதல்கள். ஆடை, அணிகலன்கள் புத்தம் புதிதாக இருக்க வேண்டும் என்பதில்லை. சிறந்த ஆடையாக இருந்தால் போதுமானது. நபி அவர்கள், பெருநாள் தினத்திலே நம்மிடம் இருக்கக்கூடிய ஆடைகளுள் மிகச் சிறந்த ஆடையை நாம் அணிய வேண்டும். நம்மிடமிருக்கும் நறுமணங்களுள் மிக உயர்ந்த நறுமணத்தைப் பூசிக் கொள்ள வேண்டும். நம்மிடமுள்ள கால்நடைகளுள் மிகச் சிறந்த கால்நடையை அறுத்துப் பலியிட வேண்டும் என்று கூறினார். இமாம் இப்னுல் கையிமான, ரஹ் அவர்கள் கூறினார். நபி அவர்கள், இரண்டு பெருநாட்களின் போதும், தம்மிடம் இருக்கின்ற ஆடைகளுள் மிக அழகான ஆடையைத் தெரிவு செய்து அணிந்து கொள்வார். அவர்களிடம் ஒரு விசேஷமான ஆடை இருந்தது. குறிப்பாக, அந்த ஆடையை, ஈதுல் பித்ர் பெருநாள் தினத்திலும் தியாகத் திருநாள் பெருநாளிலும் அணிவார்.
நிற்காத நீரூற்று!
தாகத்தில் தவித்த
பிள்ளையின்
நாவில் தீ மூட்டுகிறது.
தாயின் கண்களோ
அதைக்கண்டு
கடலை சிந்துகிறது.
கருணையால்
இறைவனின்
கவலைக்கு பூ பூட்டுகிறது
பாலைவனம்
பால் சுரக்கிறது.
பிள்ளை எட்டி
உதைத்த இடத்தில்
நிற்காத நீரூற்று...
இது
எட்டாவது
அதிசயமல்ல...
எட்டாத ரகசியம்...!
- கத்தீம் ஷாதுல்லா பாஷா