பதிவு செய்த நாள்
18
செப்
2017
01:09
மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் நடைபெற்று வரும் காவிரி மகா புஷ்கரம் விழாவில், வரும் 20ம் தேதி, முதல்வர் புனித நீராட வருகை தர உள்ளதை முன்னிட்டு, பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து, திருச்சி மத்திய மண்டல ஐ.ஜி., நேற்று நேரில் ஆய்வு செய்தார். நாகை மாவட்டம், மயிலாடுதுறையில் 144 ஆண்டுகளுக்கு பிறகு காவிரி துலா கட்டத்தில் மகா புஷ்கரம் விழா கடந்த 12ம் தேதி துவங்கி, 24ம் தேதி வரை நடைபெறுகிறது. இவ்விழாவின் போது இங்கு புனித நீராடினால் மூன்றரை கோடி தீர்த்தங்களில் நீராடிய பலன் கிடைக்கும் என்பது ஐதீகம்.
நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் அதிகாலை முதலே பல்லாயிரக்கணக்கான பக்தர்கள், துலா கட்ட காவிரி கரையில் முன்னோருக்கு திதி கொடுத்து, புனித நீராடினர். அதிக அளவில் பக்தர்கள் வந்ததால், உடை மாற்றும் அறைகள், கழிவறைகள் போதுமானதாக இல்லாததால் பெண்கள் சிரமப்பட்டனர். கடந்த 6 நாட்களில் 5 லட்சம் பக்தர்கள் காவிரி புஷ்கரத்தில் நீராடியுள்ளனர்.