திருத்தணி: திருத்தணி முருகன் மலைக்கோவிலில் சுற்றித் திரியும் ஆடுகளால், பக்தர்கள் கடும் அவதிப்படுகின்றனர். திருத்தணி முருகன் மலைக்கோவிலுக்கு தினசரி ஆயிரக்கணக்கான பக்தர்கள் மூலவரை தரிசித்து செல்கின்றனர். இந்நிலையில், மலைக்கோவில் வளாகத்தில் உள்ள தேர் வீதியில், 10க்கும் மேற்பட்ட ஆடுகள் சுற்றித் திரிகின்றன. இந்த ஆடுகள், தேர் வீதியில் நடந்து வரும் பெண் பக்தர்கள் தலையில் வைத்திருக்கும் பூக்களை எட்டிப் பாய்ந்து சாப்பிடுவதால், பக்தர்கள் அச்சம் அடைந்து ஓடுகின்றனர். அதே போல், பக்தர்கள் அங்குள்ள பிரசாத கடையில் பொங்கல் மற்றும் புளியோதரை வாங்கி வரும்போது, அங்கு சுற்றித்திரியும் ஆடுகள் பிரசாதங்களை பறித்து சாப்பிடுகின்றன. இதனால், பக்தர்கள் கடும் சிரமப்படுகின்றனர். மலைக்கோவிலில் சுற்றித் திரியும் ஆடுகளை கோவில் நிர்வாகம் பிடிக்க வேண்டும் என, பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.