பதிவு செய்த நாள்
03
அக்
2017
11:10
மடத்துக்குளம்: சில நுாற்றாண்டுகளுக்கு முன்பு, மடத்துக்குளம் அருகேயுள்ள கிருஷ்ணாபுரம் மற்றும்அதனை சுற்றிலும் அடர்ந்த காடுகள் இருந்தன. இங்கு வசிக்கும் மக்கள் இந்த காடுகளுக்குள் சென்று வேட்டையாடுவது அன்றைய வழக்கமாகஇருந்தது. குழுக்களாக சென்று வேட்டை யில் ஈடுபட்டு திரும்பினர். ஒருநாள் காடுகளுக்குள் சென்ற ஒருகுழுவினர் நெடுந்தொலைவு சென்றுவிட்டதால், வந்தவழி மறந்து திசை தெரியாமல் தவித்துள்ளனர். அப்போது தரைமட்டத்தில் சிலைபோன்ற ஒருகல் கிடைத்துள்ளது. அதனை சுமந்துகொண்டு வந்து ஊரின் எல்லையில் வைத்து ‘வே ட்டைக்காரன்’ என பெயரிட்டு வழிபட தொடங்கினர். அமராவதி சர்க்கரை ஆலையிலிருந்து செங்கழனிபுதுார் செல்லும் ரோட்டில் இந்தகோவில் உள்ளது. வெள்ளி மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் பூஜை நடக்கிறது. கோவிலுக்குள் அரிவாள், வேல், ஆகிய ஆயுதங்கள் உள்ளன. கோபாவேசமான தோற்றத்தில் வேட்டைக்கார சாமியும், அருகில் கன்னிமார் சிலைகளும் உள்ளன. இங்குள்ள மக்கள் எல்லைகாவல் தெய்வம் எனவும் குறிப்பிடுகின்றனர். மடத்துக்குளம் பகுதியிலுள்ளவர்கள் கூறுகையில்,‘திக்குதெரியாமல் தவித்த தங்களுக்கு வேட்டைகாரன் தான் வழிகாட்டினார் என நம்பிய முன்னோர்கள், காட்டுக்குள் கண்டெடுத்த,சிலையை ஊரின் எல்லையில் வைத்து வழிபாடு செய்ததோடு, வேட்டைக்கு செல்லும்போதும், திரும்பி வரும் போதும், வேட்டைக்காரசாமியை வழிபடுவது வழக்கமாகும். குறிப்பிட்ட நாளில் படையலிட்டும் வணங்கியுள்ளனர். இதோடு இந்தப்பகுதியில் பிறக்கும் குழந்தைகளுக்கு வேட்டையன் என பெயரிட்டு அழைக்கின்றனர். கடந்த, 30 ஆண்டுகளுக்கு முன்பு வரை, இந்த இடத்தில் நான்குஅடி உயரத்தில் கருங்கல் சுவர்மட்டுமே இருந்தது. இதற்குள்தான் சிலைகள் இருந்தன. அதன்பின்பு, மேற்கூரையும், சுவரும் அமைக்கப்பட்டது. தற்போது வேட்டைக்கு செல்லும் வழக்கம் மறைந்து போனாலும் வழிபாடு தொடர்கிறது,’என்றனர்.