பதிவு செய்த நாள்
03
அக்
2017
11:10
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்குள் பொருத்திய தரமற்ற சி.சி.டி.வி., கேமராக்களால், பாதுகாப்பு கேள்வி குறியாகி உள்ளது என பக்தர்கள் தெரிவித்தனர். ராமேஸ்வரம் கோயிலில் பக்தர்கள் பாதுகாப்பிற்காக 2013ல் கோயில் ரதவீதியில் வாகனங்கள் செல்ல போலீசார் தடை விதித்து, பக்தர்கள் தீவிர சோதனைக்கு பிறகே கோயிலுக்குள் செல்ல அனுமதித்தனர். இதனை தொடர்ந்து கோயில் சார்பில் ரூபாய் 50 லட்சத்தில் கோயில் சன்னதிகள் முன்பும், பிரகாரம், கோயில் தங்கும் விடுதியில் 36 கேமராக்கள் பொருத்தி, கண்காணித்தனர்.ஆனால் கேமரா மற்றும் ஹார்டு டிஸ்க் தரமற்ற நிலையில் உள்ளதால், கேமராவின் பதிவுகள் 4 நாட்களுக்கு மேல் சேமிக்க முடியாது. மேலும் கேமரா பதிவில் பக்தர்கள் முகம் தெளிவற்ற நிலையில் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில் அக்.,1ல் ராமேஸ்வரம் கோயிலுக்கு வந்த ஐ.ஜி., பொன்.மாணிக்கவேல், காணாமல் போன சிலை குறித்து கோயில் இணை ஆணையர் மங்கையர்கரசி, அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
அப்போது கோயிலில் பொருத்திய சி.சி. டிவி கேமரா, அதன் தெளிவற்ற பதிவு குறித்து அதிருப்தி தெரிவித்து, தரமான கேமராக்கள் பொருத்த அறிவுறுத்தினார். பக்தர்கள் போர்வையில் கோயிலுக்குள் ஊடுருவும் சமூக விரோதிகளை கண்டுபிடிக்கும் ஆயுதமாக உள்ள சி.சி.டிவி கேமராக்கள் தரம் குறைவாக இருப்பது கோயில் பாதுகாப்பை கேள்வி குறியாக்கி உள்ளது என பக்தர்கள் தெரிவித்தனர். இந்து முன்னணி மாவட்ட செயலாளர் ராமமூர்த்தி கூறுகையில் :கோயில் பாதுகாப்புக்கு போலீசாருடன், சி.சி..டிவி கேமரா முக்கிய பங்கு வகுக்கிறது. ஆனால் ராமேஸ்வரம் கோயிலில் உள்ள தரமற்றகேமராக்களால் குற்றவாளிகள் தப்பிக்க வாய்ப்பு உள்ளது. எனவே தரமான கேமராக்கள், ஹார்டு டிஸ்க் பொருத்தி கோயில், பக்தர்கள் பாதுகாப்பை இந்து அறநிலைதுறை ஆணையர் உறுதிபடுத்த வேண்டும் என்றார்.