பதிவு செய்த நாள்
20
அக்
2017
12:10
நாமக்கல்: ராசிபுரம் மாரியம்மன், செல்லாண்டியம்மன், ஆஞ்சநேயர் கோவிலில், ஐப்பசி திருத்தேர் விழா வரும், 24ல் துவங்குகிறது. ராசிபுரத்தில், பிரசித்தி பெற்ற நித்திய சுமங்கலி மாரியம்மன், செல்லாண்டியம்மன் மற்றும் ஆஞ்சநேயர் கோவிலில் ஐப்பசி தேர்த்திருவிழா, வரும், 24ல் பூச்சாட்டுதலுடன் துவங்கி, நவ., 23 வரை நடக்கிறது. 24 இரவு, 7:00 மணிக்கு செல்லாண்டியம்மன், மாரியம்மனுக்கு பூச்சாட்டுதல் நடந்து, தினமும் பல்வேறு சமுகத்தினரின் மண்டப கட்டளை நிகழ்ச்சி நடக்கிறது. வரும், 26 இரவு, 8:00 மணிக்கு கம்பம் நடும் விழா, அன்றிரவு, 10:00 மணிக்கு குழந்தை வரம் வேண்டும் பக்தர்களுக்கு தயிர் சாதம் வழங்கப்படுகிறது. நவ.,6 காலை, 5:00 மணிக்கு பூவோடு எடுத்தலும், 7 இரவு, 8:00 மணிக்கு கொடியேற்று விழா நடக்கிறது. நவ., 9 அதிகாலை, 5:00 மணிக்கு அக்கினி குண்டம் இறங்கும் நிகழ்ச்சி நடக்கிறது. மாலை, 4:00 மணிக்கு திருத்தேர் உற்சவ விழா நடக்கிறது. 10ல், வண்டி வேடிக்கை நடக்கிறது. 11ல், புஷ்ப பல்லக்கில் மாரியம்மன் பவனி வந்து சப்தாபரணம் நடைபெறுகிறது. 12ல் வசந்தோற்சவம் நடக்கிறது. நவ., 23 அன்று விடையாற்றி கட்டளையுடன் திருவிழா நிறைவு பெறுகிறது. ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை செயல் அலுவலர் ராஜகோபால், தக்கார் செல்வி, விழா குழுவினர் செய்து வருகின்றனர்.