பதிவு செய்த நாள்
21
நவ
2017
12:11
சென்னிமலை: சென்னிமலை கைலாசநாதர் கோவிலில், கார்த்திகை சோமவார விரதத்தை, பக்தர்கள் நேற்று தொடங்கினர். கார்த்திகை மாதத்தில், பல முக்கிய விரதங்கள் கடைப்பிடிக்கப்படுகின்றன. அவற்றுள் முக்கியமானது கார்த்திகை சோமவாரம் ஆகும். திங்கள்கிழமை தோறும் கடைப்பிடிக்கப்படும். சோமன் என்றால் உமையுடன் கூடிய சிவன் என்று பொருள். சந்திரன் என்ற பொருளும் உண்டு. சிவபெருமானுக்குரிய விரதங்கள், எட்டு என்று ஸ்கந்த புராணம் கூறுகிறது. அவற்றுள் கார்த்திகை சோம வார விரதம். இந்நிலையில் கார்த்திகை மாதத்தின் முதல் திங்கட்கிழமையான நேற்று, சென்னிமலை கைலாசநாதர் கோவிலில், ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்து, சோம வார விரதத்தை தொடங்கினர். இதையொட்டி நேற்று மாலையில், கோவிலில் சங்கு பூஜை நடந்தது.
சோம வார விரத மகிமை: தட்சாதிபதியின் புதல்விகள், 27 நட்சத்திரப் பெண்களையும் மணந்தான் சோமன் என்னும் சந்திரன். இதில் ரோகிணி மீது அதீத பற்றுதல் கொண்டதால், மற்றவர்கள் தந்தையிடம் முறையிட்டனர். தட்சாதிபதி, புத்திமதி கூறினார். சந்திரன் ஏற்காததால் சபித்து விட்டார். இதனால் வருத்தமுற்ற சந்திரன், சிவபெருமானை நினைத்து சோமவார விரதம் கடைப்பிடித்தான். கார்த்திகை மாத சோம வாரத்தில்தான், சந்திரனை காக்கும்பொருட்டு, தன் தலை முடியில், சந்திரனை அமர்த்தி கொண்டார். அப்படியமர்ந்த சந்திரன், இறைவா! சோம வாரம் தோறும் பூஜை செய்து விரதம் இருப்பவர்களுக்கு நற்கதியைக் கொடுக்க வேண்டும் என்று வரம் கேட்க, சிவபெருமான் வழங்கினார். இந்த விரதத்தை அனுஷ்டிப்போர், அன்றைய தினம் முழுவதும் உபவாசம் இருப்பது நல்லது. அவ்வாறு இருக்க முடியாதவர்கள் இரவில் பால், பழம் மட்டும் உண்ணலாம். அதுவும் செய்ய இயலாதவர்கள் மதியத்துக்கு பின் உணவருந்தலாம். விரதம் மேற்கொண்டால், பாவங்கள் அகலும்; நோய் நொடிகள் அண்டாது என்று கூறப்படுகிறது. பக்தர்கள், தங்கள் வசதிக்கேற்ப, வாழ்நாள் முழுவதும் அல்லது குறிப்பிட்ட ஆண்டுகளுக்கோ கடைப்பிடிக்கலாம் என்கின்றனர் ஆன்மிக சான்றோர்கள்.