பதிவு செய்த நாள்
29
டிச
2017
09:12
திருச்சி: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில், இன்று அதிகாலை, 4:45 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்பட்டது.வைகுண்ட ஏகாதசியின் முக்கிய நிகழ்வான சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியை காண பக்தர்கள் ரங்கா... ரங்கா... என பரவசத்துடன் முழங்க, பரமபதவாசல் என அழைக்கப்படும் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது.
வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு நடக்கும் சொர்க்கவாசல் திறப்பு, 2017ம் ஆண்டில் இரண்டாவது முறையாக, டிசம்பர், 29ல் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் நடைபெற்றது. பெருமாளுக்கு உகந்த பண்டிகையான வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, ஸ்ரீரங்கம், திருப்பதி, சென்னை பார்த்தசாரதி கோவில்கள் உள்ளிட்ட அனைத்து பெருமாள் கோவில்களிலும் சொர்க்கவாசல் எனப்படும் பரமபதவாசல் திறப்பு நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெறும். கடந்த ஆண்டுக்கான சொர்க்கவாசல் திறப்பு, 2017ல் ஜனவரி, 8ல் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் நடந்தது. இந்த ஆண்டுக்கான வைகுண்ட ஏகாதசி விழா, டிசம்பர், 18ல் திருநெடுந்தாண்டகம் நிகழ்வுடன் துவங்கியது. அடுத்தநாள் பகல்பத்து நிகழ்ச்சிகள் துவங்கி, 28ம் தேதி மோகினி அலங்காரம் நடைபெற்றது. இந்த ஆண்டில் இரண்டாவது முறையாக சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. பக்தர்கள் வெள்ளத்தில் நம்பெருமாள் பரமபத வாசலை கடந்து, திருக்கொட்டகையில் பிரவேசித்தார்.மூலவர், முத்தங்கி அலங்காரத்தில் காட்சி தந்தார். பின், ஜனவரி, 4ல் வைகுண்ட ஏகாதசி விழாவின் முக்கிய நிகழ்வுகளான திருக்கைத்தல சேவையும், 5ல் திருமங்கைமன்னன் வேடுபறியும், 7ல் தீர்த்தவாரியும், 8ல் நம்மாழ்வார் மோட்சமும் நடைபெறுகிறது.