கீழக்கரை: உத்தரகோசமங்கை மங்களேஸ்வரி அம்மன், மங்களநாத சுவாமி கோயிலில் ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு பச்சை மரகத நடராஜரின் திருமேனியில் புதிய சந்தனக்காப்பு அணிவிக்கப்பட்டது.ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு நேற்று முன்தினம் காலை 9:30 மணியளவில் சந்தனம் களையப்பட்டு, காலை வேளையில் அபிஷேகமும், இரவு 11:00 மணிக்கு மேல் 18 வகையான மகா அபிஷேகமும் நடந்தது. பின்னர் புதிய சந்தனக்காப்பு சாத்தப்பட்டு, சர்வ மலர் அலங்காரத்தில் நேற்று அதிகாலை 4:00 மணிக்கு பக்தர்களுக்கு அருள்பாலித்தார். காலை 10:00 மணிக்கு கூத்தர் பெருமான் திருவீதியுலாவும்,மாலை 4:00 மணிக்கு பஞ்சமூர்த்திகளுக்கு அபிஷேக ஆராதனை நடந்தது. இரவு 9:30 மணிக்கு மாணிக்கவாசக சுவாமிகளுக்கு காட்சியளிக்கும் நிகழ்ச்சி நடந்தது. மேளதாளங்கள் முழங்க பஞ்சமூர்த்தி புறப்பாடுடன், வெள்ளி ரிஷப சேவையும் நடந்தது. பூஜைகளை ஸ்தானிக சிவாச்சாரியார்கள் செய்தனர்.ஏற்பாடுகளை ராமநாதபுரம் சமஸ்தான, தேவஸ்தான நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.