பதிவு செய்த நாள்
10
ஜன
2018
11:01
ஊத்துக்கோட்டை : அஷ்டமி தினத்தை ஒட்டி, மகா கால பைரவர் கோவிலில் நடந்த சிறப்பு பூஜையில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர். ஊத்துக்கோட்டை அடுத்த, தொம்பரம்பேடு கிராமத்தில் உள்ளது மகா கால பைரவர் கோவில். இக்கோவில் பொதுமக்கள் பங்களிப்புடன் சமீபத்தில் புதுப்பிக்கப்பட்டு, கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. இக்கோவிலில் நடைபெறும் விழாக்களில் தேய்பிறை அஷ்டமி நாளில் நடைபெறும் பூஜை சிறப்பு வாய்ந்தது.நேற்று, தேய்பிறை அஷ்டமி தினத்தை ஒட்டி, மூலவர் மகா கால பைரவருக்கு பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன், மஞ்சள் உள்ளிட்ட அபிஷேகப் பொருட்களால் சிறப்பு பூஜை நடந்தது. தொடர்ந்து, மூலவருக்கு வெள்ளிக்கவசம் அணிவிக்கப்பட்டு, மலர் மாலைகளால் சிறப்பு அலங்காரம் நடந்தது. பின், மகா தீபாராதனை காட்டப்பட்டது. இதில் திரளான பக்தர்கள், சுவாமியை வழிபட்டனர்.