ஸ்ரீவில்லிபுத்துார் : ஆண்டாளை அவதுாறாக பேசிய வைரமுத்து மன்னிப்பு கேட்க கோரி உண்ணாவிரதம் மேற்கொண்ட ஸ்ரீவில்லிபுத்துார் ஜீயர், மன்னார்குடி ஜீயரின் வேண்டுகோளை ஏற்று கைவிட்டார். கடந்த ஜன.7ல் ராஜபாளையத்தில் நடந்த நிகழ்ச்சியில் ஆண்டாளை அவதுாறாக பேசிய வைரமுத்து, ஆண்டாள் சன்னதிக்கு நேரில் வந்து மன்னிப்பு கேட்கவேண்டும் என்பதை வலியுறுத்தி ஸ்ரீவில்லிபுத்துார் சடகோபராமானுஜ ஜீயர் நேற்று முன்தினம் உண்ணாவிரதம் துவக்கினார். இரண்டாம் நாளாக நேற்றும் தொடர்ந்தார். காலை 9:00 மணிக்கு உண்ணாவிரத மண்டபத்துக்கு பா.ஜ., தேசிய செயலர் எச் .ராஜா வந்து ஜீயரை சந்தித்து உண்ணாவிரதத்தை கைவிடகோரினார். காலை 11:00மணிக்கு மன்னார்குடி செண்டலங்கார செண்பகராமானுஜ ஜீயர் ஸ்ரீவில்லிபுத்துார் வந்தார். துறவு வாழ்க்கை மேற்கொள்ளும் ஜீயர்கள் உண்ணாவிரதம் இருப்பது நாட்டிற்கும், மனித குலத்திற்கும் நல்லதல்ல, என கூறி சடகோப ராமானுஜ ஜீயரிடம் உண்ணாவிரதத்தை கைவிட கோரினார்.
இதே கருத்தை முன்னாள் எம்.எல்.ஏ., எஸ்.வி.சேகர் மற்றும் இந்து முன்னணி, ஆர்.எஸ்.எஸ்., விஸ்வ ஹிந்து பரிஷத் நிர்வாகிகளும் வலியுறுத்தினர். இதையடுத்து ஸ்ரீவில்லிபுத்துார் ஜீயர் கூறுகையில், மன்னார்குடி ஜீயர் உள்ளிட்டோர் வலியுறுத்தியதை ஏற்று உண்ணாவிரதத்தை கைவிடுகிறேன். தன்னை நிந்தித்தவர்களை ஆண்டாள் தாயாரே தண்டிப்பாள். இனிமேல் இந்து மதத்தை மட்டுமல்ல எந்த மதத்தையும் யாரும் இழிவுபடுத்தி பேசக்கூடாது. இந்து மக்கள் விழிப்புணர்விற்காக ஆன்மிக பிரசாரம் தொடரும், என்றார். இதையடுத்து மன்னார்குடி ஜீயர் வழங்கிய துளசி தண்ணீரை பருகி உண்ணாவிரதத்தை ஸ்ரீவில்லிபுத்துார் ஜீயர் நிறைவு செய்தார்.