பதிவு செய்த நாள்
02
மார்
2018
01:03
தீர்த்தமலை: தீர்த்தமலை தீர்த்தகிரீஸ்வரர் கோவில் மாசி மக தேரோட்டம், கொடியேற்றத்துடன் நேற்று துவங்கியது. அரூர் அடுத்த தீர்த்தமலையில் தீர்த்தகிரீஸ்வரர் கோவில் உள்ளது. ராமபிரான் ராவணனை சம்ஹாரம் செய்து திரும்புகையில், முதல் கால பூஜையை ராமேஸ்வரத்தில் முடித்துவிட்டு, இரண்டாம் கால பூஜைக்காக, தீர்த்தகிரி மலை மீது அம்பு எய்தி தீர்த்தம் உண்டாக்கி, அந்த தீர்த்தத்தை கொண்டு பூஜையை முடித்தார் என்பது இறை நம்பிக்கை.
அந்த தீர்த்தமே ராமர் தீர்த்தம் என்ற புண்ணிய தீர்த்தமாகும். இந்த மலையும் தீர்த்தகிரி மலை என்று அழைக்கப்படும் புண்ணிய மலையாகும். ராமர், பார்வதிதேவி, குமர கடவுள், அக்னிதேவன், அகத்திய முனிவர் ஆகியோர் தவம் செய்து பாவ விமோச்சனம் பெற்ற தலம் இத்திருத்தலமாகும். தர்மபுரி மாவட்டத்தில், அருணகிரிநாத சுவாமிகளால் திருப்புகழ் அருளிய ஒரே திருத்தலம் தீர்த்தமலை தீர்த்தகிரீஸ்வரர் திருத்தலமாகும். வரலாற்று சிறப்பு மிக்க இத்திருத்தலத்தின் மாசி மக தேரோட்ட விழா, நேற்று முன்தினம் விநாயகர் பூஜையுடன் துவங்கியது. நேற்று கொடியேற்றமும், இன்று சுவாமி திருவீதி உலாவும் நடக்கிறது. நாளை விளக்கு பூஜையும், 5ல் சுவாமி திருக்கல்யாணமும் நடக்கவுள்ளது. விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம், வரும், 7ல் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்து வருகிறது.