பதிவு செய்த நாள்
03
மார்
2018
11:03
விருத்தாசலம்: விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவில் மாசிமக பிரம்மோற்சவ விழாவில், சுப்ரமணியர் சுவாமி தெப்பத்தில் உலா வந்து அருள்பாலித்தார். கடலுார் மாவட்டம், விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவில் மாசிமக பிரம்மோற்சவ விழா, கடந்த 20ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினசரி காலை ஆழத்து விநாயகர், விருத்தகிரீஸ்வரர், அம்பாள் (பாலாம்பிகை, விருத்தாம்பிகை), சண்முக சுப்ரமணியர், சண்டிகேஸ்வரர் உள்ளிட்ட பஞ்சமூர்த்திகளுக்கு சிறப்பு அபிேஷக ஆராதனை, சிறப்பு அலங்காரத்தில் பல்லக்கில் வீதியுலா, இரவு சிறப்பு வாகனங்களில் வீதியுலா வந்து அருள்பாலித்தார்.
இன்று, மாசிமக பிரம்மோற்சவ 11ம் நாள் உற்சவமாக நகராட்சி நிர்வாகம் சார்பில் தெப்பல் உற்சவம் நடந்தது. இதையொட்டி, நேற்று இரவு புஷ்ப வாகனத்தில் சுப்ரமணியர் சுவாமி வீதியுலா வரும் நிகழ்ச்சி நடந்தது. கிராமிய கலை நிகழ்ச்சிகளுடன் சுவாமி முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக வந்து, அதிகாலை 3:00 மணிக்கு புதுப்பேட்டை அம்மன் குளம் வந்தடைந்தது. அங்கு, அலங்கரித்த தெப்பத்தில் புஷ்ப விமானத்தில் சுப்ரமணியர் சுவாமி வைக்கப்பட்டு, சிறப்பு வழிபாடு நடந்தது. தொடர்ந்து, வான வேடிக்கைகளுடன் 3:20 மணிக்கு தெப்பல் உற்சவம் துவங்கியது. நகராட்சி கமிஷனர் பாலு உள்ளிட்ட அலுவலர்கள் தெப்பத்தில் பங்கேற்றனர். அம்மன் குளத்தை சுப்ரமணியர் சுவாமி மூன்று முறை வலம் வந்து அருள்பாலித்தார். அம்மன் குளத்தை சுற்றி விளக்குகள் ஏற்றி, சுவாமிக்கு தீபாராதனை செய்து, பக்தர்கள் வழிபட்டனர். காலை 5:30 மணிக்கு தெப்ப உற்சவம் முடிந்து, சுவாமி பல்லக்கில் கோவிலுக்கு வந்தடைந்தார். ஏராளமானோர் தரிசனம் செய்தனர். 12ம் நாள் நிறைவாக நாளை, சண்டிகேஸ்வரர் ரிஷப வாகனத்தில் வீதியுலா வரும் நிகழ்ச்சி நடக்கிறது.