பதிவு செய்த நாள்
09
மார்
2018
11:03
திருச்சி: திருச்சி, ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் உருவாகும் இயற்கை கழிவுகளை, மறு சுழற்சி செய்து, பசுமை கோவிலாக்கும் திட்டத்தை, தனியார் நிறுவனம் செயல்படுத்த உள்ளது.கோவில்களில் பயன்பாட்டுக்கு பின், சேகரமாகும் பூக்கள், மீதமாகும் பிரசாதம், பழக்கழிவுகள் மற்றும் கோசாலை கழிவுகளை, நவீன தொழில் நுட்பத்தில், மறு சுழற்சி செய்து, பசுமை கோவில்களாக மாற்றும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.திருச்சி, ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில், இத்திட்டத்தை, இணை ஆணையர், ஜெயராமன் நேற்று துவக்கி வைத்தார்.
இதுகுறித்து, அகர்பத்தி நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரி, ராஜசேகரன் கூறியதாவது:அகர்பத்தி நிறுவனத்தின் சார்பில், கடந்த ஆண்டு ஜனவரி மாதம், சென்னை, கபாலீஸ்வரர் கோவிலில், பசுமை கோவில் திட்டம் துவங்கப்பட்டது.ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஆய்வு நடத்திய தொழில் நுட்ப நிபுணர் குழு, அங்கு உருவாகும் கழிவுகளில், 90 சதவீதம் இயற்கை கழிவுகள் எனக் கண்டறிந்துள்ளனர்.அவற்றை மறுசுழற்சி செய்து, கம்போஸ்ட் உரமாகவும், இயற்கை எரிவாயுவாகவும் மாற்றத் தேவையான கட்டமைப்புகள் உருவாக்கப்பட்டுள்ளது.ரெங்கநாதர் கோவிலில், தினமும், 300 கிலோ பசும் சாணம், 18 கிலோ எரிவாயுவாக மாற்றப்பட்டு, அன்னதான மண்டபசமையலுக்கும், 500 கிலோகம்போஸ்ட் உரம் கோவில் நந்தவனத்துக்கும் பயன்படுத்தப்படும்.இவ்வாறு அவர்தெரிவித்தார்.