பதிவு செய்த நாள்
20
மார்
2018
01:03
வாழ்விற்கு பணம் அவசியம். அதை உழைப்பால் பெறும் உரிமையை ஆண்களை போல, பெண்களுக்கும் இஸ்லாம் வழங்கியிருக்கிறது. “உங்களில் எவருக்கேனும் அல்லாஹ் செல்வத்தை வழங்கினால், அவர் முதலில் தனக்கும், பின்னர் தன் வீட்டாருக்கும் செலவு செய்யட்டும்,” என்ற நபிமொழியிலுள்ள ‘வீட்டார்’ என்னும் சொல், மனைவி மக்களை குறிக்கும். எனவே, ஒவ்வொரு கணவனும் தனக்கு தேவையான உணவு, உடை, உறைவிட தேவைகளை அடைய முயல்வது போல், தன் மனைவி, மக்களையும் அவற்றை அடைய செய்ய வேண்டும். செலவழிக்க தயங்கும் கஞ்சத்தனம் கொண்ட கணவராக இருந்தால், தனக்கு நியாயமான அளவு பணத்தை எடுக்கும் உரிமை மனைவிக்கு வழங்கப்பட்டுள்ளது. நாயகத்தின் துணைவியாரான ஆயிஷா, இது குறித்து ஒரு சம்பவத்தை சொல்லியிருக் கிறார்.
அபூசுப்யானின் மனைவியும், உத்பாவின் மகளான ஹிந்தா, நாயகத்திடம், அல்லாஹ்வின் தூதரே! என் கணவர் கஞ்சனாக இருக்கிறார். அவருக்கு தெரியாமல், அவரின் பணத்தில் இருந்து எடுப்பதை தவிர வேறு வழி இல்லை. ஏனெனில், அவர் எனக்கும் குழந்தைகளுக்கும் தேவையானதை கொடுப்பதில்லை,” என்று முறையிட்டார். அதற்கு நாயகம், “உனக்கும் உன் குழந்தைகளுக்கும் தேவையான பணத்தை நியாயமான அளவுக்கு எடுத்துக் கொள்ளலாம்,” என்றார். இதன் மூலம், மனைவிக்கு தேவையான பணம் தருவது அவசியம்.இல்லாவிட்டால் அதை பெறும் உரிமை மனைவிக்கு உண்டு என்பது தெளிவாகிறது.