மதுரை, மதுரை காஞ்சிகாமகோடி பீடத்தில் அனுஷத்தின் அனுகிரஹம் சார்பில் வசந்த நவராத்திரி உற்சவத்தை முன்னிட்டு ஆன்மிக சொற்பொழிவு நடந்தது. சின்மயா மிஷன் ஆச்சார்யா சுவாமி சிவயோகானந்தா கடோபநிஷத் என்ற தலைப்பில் பேசியதாவது: பார்க்கக் கூடிய உலகத்திற்கு மூலமாக இருப்பவர் இறைவன். அந்த இறைவனை நம்மால் உணர முடியும் ஆனால் பார்க்க முடியாது. இறைவன் எல்லா வடிவம், பெயர்களுக்கு அப்பாற்பட்டு இருக்கிறார். அந்த இறை தன்மை நம் உள்ளங்களில் நிரம்பி இருக்கிறது. நாம் காணும் இந்த உலகை மையமாக கொண்டு இதற்கு ஆதாரமாக இருக்கும் இறைவனை அறியலாம். உலகில் இருக்கும் ஜீவராசிகள் எல்லாம் இன்பம், துன்பம், மானம், அவமானம் போன்ற பல அனுபவங்களை அனுபவிக்கிறது. இறை தன்மை என்பது மாறக் கூடிய இயல்புகளுக்கும், அனுபவங்களுக்கும் ஆதாரமாக மாறாமல் இருக்கின்றது. நம் வாழ்வில் இன்பத்தையும், துன்பத்தையும் சமமாக எடுத்துக் கொண்டால் இறைநிலையை எளிதில் அடையலாம், என்றார். இன்று மாலை 6:00 மணிக்கு சங்கர் நிகழ்த்தும் திவ்யபிரபந்தம் இசை நிகழ்ச்சி நடக்கிறது.