பதிவு செய்த நாள்
23
மார்
2018
05:03
திருவண்ணாமலை: திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவில் யானை ருக்கு, அடக்கம் செய்யப்பட்ட இடத்தில், பக்தர்கள் மலர் துாவியும், மலர் வளையம் வைத்தும், அஞ்சலி செலுத்தினர்.
திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவில் யானை ருக்கு, கடந்த, 22 ஆண்டுகளாக, கோவிலில் நடக்கும், கார்த்திகை தீப திருவிழா உள்ளிட்ட அனைத்து, விழாக்களிலும், சுவாமி மாட வீதி உலா செல்லும்போது, முன்னே சென்று, வழி நடத்தியது. நேற்று உடல் நலக்குறைவால், கோவில் யானை ருக்கு இறந்ததால், பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர். குடும்ப உறுப்பினர் இறந்ததை போல, அப்பகுதி மக்கள் சோகத்தில் மூழ்கி உள்ளனர். தினமும், அதிகாலை, 5:00 மணிக்கு, குமரக்கோவில் கிணற்றிலிருந்து, சுவாமி அபிஷேகத்திற்கு, யானை ருக்கு தண்ணீர் கொண்டு செல்வது வழக்கம். அந்த நேரத்தில், அப்பகுதியில் குடியிருப்பவர்கள் ருக்குவை தரிசிப்பர். இந்த நிகழ்வு இன்று நடக்காததால், அப்பகுதி மக்கள், ருக்குவை நினைத்து கண் கலங்கினர். ருக்கு அடக்கம் செய்யப்பட்ட இடத்தில், பொதுமக்கள் மலர் வளையம் வைத்தும், மலர் துாவியும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.