பதிவு செய்த நாள்
24
மார்
2018
03:03
ஸ்ரீபெரும்புதூர்: ஆதிகேசவ பெருமாள் கோவில் தேருக்கு கூண்டு இல்லாததால், வெயிலில் வீணாகி வருகிறது.
ஸ்ரீபெரும்புதூரில், ஆதிகேசவப் பெருமாள் மற்றும் பாஷ்யகார சுவாமி கோவில் உள்ளது. வைணவ மகான் ராமானுஜரின் அவதார தலமான இங்கு, நாட்டின் பல மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகின்றனர்.
கோவிலுக்கு சொந்தமான தேர், கோவிலுக்கு சற்று தொலைவில் நிறுத்தப்பட்டுள்ளது. அங்கு ஏற்படுத்தப்பட்டிருந்த தேர் கூண்டு, கடந்தாண்டு நடந்த, ராமானுஜர் ஆயிரமாவது ஆண்டு விழாவின் போது அகற்றப்பட்டது.
ராமானுஜர் விழா முடிந்து, ஓராண்டாகியும், தேர் கூண்டு அமைக்கப்படவில்லை. இதனால், மழை, பனி, வெயில், தூசியால், தேர் வீணாகி வருகிறது.
இது குறித்து, நமது நாளிதழில் செய்தி வெளியானதை அடுத்து, தேர் மீது, பெரிய பாலிதீன் கவர் சுற்றப்பட்டு, தற்காலிக பாதுகாப்பு அமைக்கப்பட்டது. இந்நிலையில், கொளுத்தும் வெயிலில், பாலிதீன் கவர்கள் உருகும் நிலையில் உள்ளது.
மேலும், மர்ம நபர்களால் தேருக்கு ஆபத்து ஏற்படலாம் என, பக்தர்கள் அச்சமடைகின்றனர்.
இது குறித்து, கோவில் செயல் அலுவலர் கூறுகையில், 27 லட்சம் ரூபாய் செலவில் தேர் கூண்டு அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த ஆண்டு பிரம்மோற்சவ விழா முடிந்ததும், பணிகள் துவங்கப்படும் என்றார்.