ராவணன் இலங்கைக்கு சீதையை கடத்திச் சென்ற போது, வழியில் கோதாவரி நதியை பார்த்தாள், “அம்மா! கோதாவரி! உன்னை போல் நானும் ஒரு பெண். எனக்கு நடக்கும் கொடுமையை பார்த்துக் கொண்டிருக்கிறாயே!” என்று சொல்லி அழுதாள். சீதையை தேடிய ராமனும், “கோதாவரித்தாயே! என் மனைவியை கண்டாயா?” என்று கேட்டார். ராவணன் மீதுள்ள பயத்தால், மவுனமாக கோதாவரி இருந்து விட்டாள். நமக்கு சம்பந்தம் இல்லாவிட்டாலும் கூட, அடுத்தவருக்கு துன்பம் நேரும் போது, உண்மையை மறைப்பது குற்றம். இதனால் ஏற்பட்ட பாவத்தை பின்னாளில் கோதாவரி போக்கிக் கொண்டாள். ஸ்ரீவில்லிபுத்தூரில் பிறந்த ஆண்டாளுக்கு பெரியாழ்வார், “கோதா” என்று பெயரிட்டார். கோதாவரியின் பாவம் நீங்க இந்த நிகழ்வு பரிகாரமாக அமைந்தது. “கோதை” என்று சொன்னாலும், கேட்டாலும் பாவம் தீரும்.